Skip to main content

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை திணறடித்த ஐ.பி...!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் என இரண்டு ஒன்றியங்கள் உள்ளன. ஆத்தூர் ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகளும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகளும், ஆத்தூர் ஒன்றியத்தில் 17 ஒன்றியக்குழு வார்டுகளும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 18 ஒன்றியகுழு வார்டுகளும் உள்ளன.

 

local body election-dmk-admk-I. Periyasamy

 



நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. குறிப்பாக 40 வருடங்கள் இல்லாத சாதனையாக ஆத்தூர் ஒன்றியகுழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளையும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ஒன்றியகுழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது. இது தவிர ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள 4 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது.

இதுதவிர ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 46 கிராம ஊராட்சிகளில் 40 கிராம ஊராட்சிகளை திமுக ஆதரவு தலைவர்களே கைப்பற்றியுள்ளனர். ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வார்டு எண் 20ல் திமுக சார்பாக போட்டியிட்ட வார்டில்  போட்டியிட்ட பாஸ்கரன் என்பவர் முன்னாள் அதிமுக ஒன்றியக்கழு தலைவராக இருந்த பி.கோபியை விட 6 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 11ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருக்கான தேர்தலில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமியின் பரிந்துரையின் பேரில் பாஸ்கரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுபோல ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமியும், துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேஸ்வரியும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதுபோல ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மு.மகேஸ்வரியும், துணை தலைவர் பதவிக்குபோட்டியிட்ட ம.ஹேமலதாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதியில் எவ்வித பிரச்சனையும் இன்றி திமுக ஆதரவு ஊராட்சி மன்ற தலைவர்களும், துணை தலைவர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

 



உள்ளாட்சி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தொகுதி முழுவதும் ஆய்வு செய்த திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி சக்கரவியூகம் மற்றம் ஐபி வியூகத்தை காண்பித்து ஆத்தூர் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றினார். இதனால் ஆத்தூர் தொகுதியில் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஆத்தூர் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட மு.மகேஸ்வரி மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ம.ஹேமலதாவுடன் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமியிடம் வாழ்த்து பெறுவதற்காக அவர் இல்லத்திற்கு வந்திருந்தனர்.

அவர்கள் மத்தியில் பேசிய இ.பெரியசாமி, "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதான் உள்ளாட்சிதேர்தலில் உங்களுக்கு வாக்களித்து உங்களை வெற்றிபெற வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் நீங்கள் வெற்றிபெற்ற வார்டில் பொதுமக்களுக்கு நலப்பணிகளை செய்யவேண்டும்" என்று அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, திமுக சட்டமன்ற கொறடா அர.சக்கரபாணி, ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நா.சிந்தாமணி, எம்.காணிக்கைசாமி, கா.செல்வி, ஐ.பிளாசி, செ.காணிக்கைராஜ், பெ.பாப்பாத்தி, ம.ஜோதி, ஆ.அழகுசரவணக்குமார், மு.நிச்சிதா, சே.முத்துமாரி, எம்.நாகவள்ளி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், திமுக பிரமுகர் ரெக்ஸ், கும்மம்பட்டி விவேகானந்தன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஐ.பி.பாசறை உலகநாதன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.