Skip to main content

ஊரக உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி; திமுகவுக்கு பின்னடைவு!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

சேலம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு, பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக 12 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27.12.2019ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 8 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு 30.12.2019ம் தேதியும் தேர்தல் நடந்தது.
 

சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி, 385 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, 3597 கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4299 பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களிலும் சேர்த்து சராசரியாக 81.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 
 

local body election admk leading in salem district


ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய இரு பதவிகளுக்கும் கட்சிகள் அடிப்படையில் தேர்தல் நடந்தது.


தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் வீதம் மொத்தம் 20 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டன. அனைத்து மையங்களிலும் வியாழக்கிழமை (ஜன. 2, 2020) காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 


ஒவ்வொரு வாக்காளரும் நான்கு பதவிகளுக்கு வாக்களித்து இருப்பதால், நான்கு வண்ண வாக்குச்சீட்டுகளையும் தனித்தனியாக பிரித்தல், வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து வாக்கு எண்ணும் மைய ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதால், அனைத்து மையங்களிலும் தாமதமாக காலை 11.00 மணிக்கு மேல்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

local body election admk leading in salem district


வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டாலும்கூட, வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அறிவிப்பதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏனோ தாமதம் செய்தனர். இதனால் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். 


சேலம் மாவட்டத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில், இரவு 11.00 மணி வரையில் வெற்றி பெற்ற 129 வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. அதன்படி, 5000 ஓட்டு கவுன்சிலர் எனப்படும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டதில் அதிமுக 60 இடங்களும், திமுக 30 இடங்களும், பாமக 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 288 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல, மொத்தமுள்ள 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இரவு 10.00 மணி நிலவரப்படி, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 24வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த தங்கமணி 17939 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 8வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா 18453 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.


கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக வெற்றி சான்றிதழ் வழங்கப்படவில்லை. நீண்ட நேரமாக வாக்கு எண்ணும் மைய வளாகத்திலேயே காத்திருந்தனர். பின்னர் தேர்தல் அதிகாரிகள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வெற்றி சான்றிதழை பெறாதவர்கள், மறுநாள் (அதாவது இன்று, ஜன. 3) காலையில் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பெற்றுக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டது.


வாக்கு எண்ணிக்கை அதிகாலை 02.00 மணிக்குப் பிறகும் தொடர்ந்து நடந்து வந்தது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் இறுதி நிலவரம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.