தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தக் கூடாது. இரண்டு கட்டங்களாகத் தேர்தலை நடத்துவது கள்ள ஓட்டு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.