local body eection chennai high court order

Advertisment

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில், கடலூர் மாவட்டம், குமளங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜெயலட்சுமி (ஆட்டோ ரிக்ஷா சின்னம், 2,524 வாக்குகள்) என்பவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயலட்சுமி (பூட்டுசாவி சின்னம் 1,478) என்பவரை விட 1,046 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால், சில மணி நேரத்தில், விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதை எதிர்த்து ஜெயலட்சுமியும், தன்னைப் பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என விஜயலட்சுமியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சின்னம் ஒதுக்கீடு செய்ததில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், இந்தத் தேர்தலை ரத்து செய்து, மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், சின்னம்ஒதுக்கியதில் குளறுபடிகள் ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. ஆணையத்தின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது,தேர்தல் முடிந்தபிறகு தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவதுபோல் உள்ளது.’ எனக் கருத்துத் தெரிவித்தார்.

cnc

இதையடுத்து, ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக 1 வாரத்தில் அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, தன்னை பதவி ஏற்க அனுமதிக்கக்கோரி விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.