Skip to main content

கந்துவட்டியால் நேர்ந்த கொடுமை; வாங்கிய கடனுக்காக சொத்துக்களை அபகரித்ததாக புகார்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

salem loan interest incident

 

நாமக்கல் அருகே, 3 லட்சம் ரூபாய் கடனுக்கு ஈடாக 2 கோடி ரூபாய் சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் தன் பெயருக்கு கிரயம் செய்து கொண்டதாக கந்துவட்டி ஆசாமி குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டியைச் சேர்ந்தவர் கோபிநாத் (40). இவர், கோழித்தீவனம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை விற்பனை செய்து வருகிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு கோபிநாத், சின்ன முதலைப்பட்டிச் சேர்ந்த துரைசாமி என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். மாதந்தோறும் கடனுக்கான வட்டியும், அசல் தொகையின் ஒரு பகுதியையும் தவணை முறையில் செலுத்தி விடுவதாக கூறியுள்ளார்.

 

இதற்கிடையே, இன்னும் 2 லட்சம் ரூபாய் பாக்கி இருந்த நிலையில், கடன் கொடுத்த துரைசாமியோ, உடனடியாக பாக்கித்தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாதந்தோறும் வட்டி மட்டுமே 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என மிரட்டியுள்ளார். அதாவது டபுளிங் வட்டி செலுத்த வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார். இதுமட்டுமின்றி, கோபிநாத்துக்குச் சொந்தமான சொத்து பத்திரங்கள், நிரப்பப்படாத வங்கி காசோலைகள் உள்ளிட்ட ஆவணங்களையும் துரைசாமி எடுத்துக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கோபிநாத் ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் ஆனார்.

 

இந்நிலையில் கோபிநாத், துரைசாமிக்கு சேர வேண்டிய தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தி விட்டதாகவும், தன்னிடம் இருந்து எடுத்துச்சென்ற சொத்து ஆவணங்களை திருப்பித் தரும்படியும் கேட்டுள்ளார். அப்போதுதான் கோபிநாத்துக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அவருக்கே தெரியாமல் துரைசாமி போலி ஆவணம் தயாரித்து தன் பெயருக்கு கிரயம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து கோபிநாத், நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், துரைசாமி தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாகவும், 3 லட்சம் ரூபாய் கடனுக்கு ஈடாக 2 கோடி ரூபாய் சொத்துகளை அபகரித்துக் கொண்டதாகவும், அவரிடம் இருந்து தன் சொத்துகளை மீட்டுக் கொடுக்கும்படியும் கூறியிருந்தார்.

 

எஸ்பி உத்தரவின்பேரில் நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் குமரவேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.