LOAN APP MAYILADUTHURAI DISTRICT WHATSAPP IMAGE POLICE INVESTIGATION

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ.க.வின் மாவட்ட சிறுபான்மை அணி பொதுச்செயலாளரும், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் உறுப்பினர்முகமது ரியாசுதீன். இவர் கடன் செயலி (Loan App New case) மூலம் கடன் பெற தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அளித்திருக்கிறார். ஆவணங்களை பெற்றுக் கொண்ட நிறுவனம் பணம் ஏதும் வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், திடீரென அவரது செல்போனுக்கு அந்த செயலி மூலம் ஒரு அழைப்பு வந்திருக்கிறது.

Advertisment

அதில் "தாங்கள் வாங்கிய கடனை உடனே திரும்ப செலுத்த வேண்டும்" எனக் கேட்டுள்ளனர். ரியாசுதீனோ "நீங்க இன்னும் கடன் கொடுக்கவே இல்ல, பிறகு எப்படி நான் பணம் திரும்ப செலுத்த முடியும்," எனக் கூறியுள்ளார்.

Advertisment

அத்தோடு முடிந்துவிட்டது என்றிருந்த நிலையில் ரியாசுதீன் படத்தை 'மார்பிங்' செய்து நிர்வாணமாக இருப்பது போல, அவரது வாட்ஸ் எண்ணிற்கு அனுப்பி வைத்ததோடு, தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் முகமது ரியாஸ்தீனை தொடர்புக் கொண்டு, உடனடியாகப் பணத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால், இந்த படத்தை இணைய தளத்தில் வெளியிடுவோம், என்றும் உங்கள் செல்போன் காண்டாக்ட் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்தநிலையில், ரியாசுதீன் பணம் கொடுக்காததால், அவர் செல்போனில் இருந்த நம்பர்கள் அனைத்திற்கும் ரியாசுதீனின் படத்தை மாப்பிங் செய்து ஆபாசமான படங்களை அனுப்பி உள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரியாசுதீன், இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து ரியாசுதீன் கூறுகையில்,"மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்று 100- க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வருகிறது. தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இதுபோன்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்களைப் பெற்ற சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் லோன் மோசடி கும்பலைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.