ஈரோடு ரெயில்வே ஸ்டேசனில் கூட்ஸ் ஷெட் பாரம் சுமக்கும் தொழிலாளர்களான எச்.எம்.எஸ் தொழிற்சங்கத்தின் சார்பில் கூட்ஸ் ஷெட் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 28ந் தேதி காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் ஈரோடு தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் சக்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.ஆர்.எம்.யு. பாஸ்கர், எச்.எம்.எஸ். மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.
இதில், நீண்ட பல வருடங்களாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் கூட்ஸ் ஷெட்டினை பெருந்துறை, விஜயமங்கலம், ஈங்கூர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதைக் கைவிட்டு கூட்ஸ் ஷெட்டை ஈரோட்டிலிருந்து இடமாற்றம் செய்யக்கூடாது என்பதோடு, இந்த கூட்ஸ் ஷெட்டை தனியாருக்கு வழங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ள முடிவைக் கண்டித்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.