சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்;  ரூ. 300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

Load lifting workers issue 300 crore worth of inventory backlog

ஈரோடு பார்க் ரோடு, மூலப்பட்டறை, குப்பைக்காடு போன்ற பகுதிகளில் சரக்கு லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன், ரெகுலர் லாரி சர்வீஸ் போன்ற 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருட்களை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வருகிறார்கள். புக்கிங் அலுவலகம் மூலம் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஜவுளி, மஞ்சள், விளைபொருட்கள், மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசனுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு, பிற சலுகைகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது ஒரு டன் லோடு ஏற்ற ரூ. 120 தருகின்றனர். இத்துடன் சேர்த்து 41 சதவீத கூலி உயர்வு கேட்டு தொழிற்சங்கத்தினர் போராடி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி முதல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைத்து தொழில் சங்கத்தினர் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தர்ணா போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.எஸ். தென்னரசு, டிபிடிஎஸ் தலைவர் பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதையன், பாட்டாளி தொழிற்சங்கம் எஸ்.ஆர். ராஜு, பொதுத்தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம், கவுன்சில் செயலாளர் கோபால் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருவதால் ஈரோடு மாநகரில் உள்ள குடோன்களில் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கிக் கிடக்கிறது.

CITU Erode
இதையும் படியுங்கள்
Subscribe