Skip to main content

சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்;  ரூ. 300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

Load lifting workers issue 300 crore worth of inventory backlog

 

ஈரோடு பார்க் ரோடு, மூலப்பட்டறை, குப்பைக்காடு போன்ற பகுதிகளில் சரக்கு லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன், ரெகுலர் லாரி சர்வீஸ் போன்ற 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருட்களை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வருகிறார்கள். புக்கிங் அலுவலகம் மூலம் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஜவுளி, மஞ்சள், விளைபொருட்கள், மாட்டுத் தீவனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசனுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு, பிற சலுகைகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது ஒரு டன் லோடு ஏற்ற ரூ. 120 தருகின்றனர். இத்துடன் சேர்த்து 41 சதவீத கூலி உயர்வு கேட்டு தொழிற்சங்கத்தினர் போராடி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி முதல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைத்து தொழில் சங்கத்தினர் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தர்ணா போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.எஸ். தென்னரசு, டிபிடிஎஸ் தலைவர் பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதையன், பாட்டாளி தொழிற்சங்கம் எஸ்.ஆர். ராஜு, பொதுத்தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம், கவுன்சில் செயலாளர் கோபால் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருவதால் ஈரோடு மாநகரில் உள்ள குடோன்களில் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கிக் கிடக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.