Skip to main content

ஒலிம்பிக்கிற்கு தயாராகும் எல்.கே.ஜி. சிறுமி! 

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

LKG  Little girl prepares for Olympics

 

சிதம்பரம் அருகே மணக்குடியானிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மோகன் - சத்யா தம்பதியின் இளைய மகள் அனுஸ் ரீ(4). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. கல்வி பயின்றுவருகிறார். இவருக்குத் தானாகவே 3 வயதிலிருந்து கழி மற்றும் கம்பிகளில் இரண்டு கைகளைப் பிடித்தவாறு தொங்கிச் செல்லும் திறமை இருந்துள்ளது. இதனைக் குழந்தையின் பெற்றோர்கள் விளையாட்டாக எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து 5 நிமிடம் 10 நிமிடம் என தொங்கியவாறு செல்வதைப் பார்த்த பெற்றோர்கள் திகைத்துப் போய் இவரது திறமையைக் கவனிக்க தொடங்கியுள்ளனர்.

 

அதனைத்தொடர்ந்து, குழந்தை தொங்கியவாறு செல்வதை வீடியோ எடுத்து ‘சோழன் புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு’ என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர். இதனைப் பார்த்து வியந்துபோன அந்த நிறுவனத்தினர், சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம், “இதேபோல் ராணுவத்தில் மங்கிபார் என்ற பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதில் வீரர்கள் பலர் பயிற்சி பெற்றுவருகிறார்கள். எதிரிகளை மரம் மற்றும் கயிறுகளில் நீண்ட தூரம் தொங்கியவாறு சென்று தாக்குவதற்கு இதுபோன்று தனித்திறமையுள்ளவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். அதேபோல் ஒலிம்பிக்கில் இதுபோன்ற போட்டிகள் உள்ளன. எனவே குழந்தைக்கு இயற்கையிலே 4 வயதில் இதுபோல் திறமை உள்ளது வியப்பாக உள்ளது. குழந்தைக்கு வீட்டிலே பயிற்சி கொடுங்கள்” என்று கூறியுள்ளனர்.

 

அதன் அடிப்படையில் பெற்றோர்கள் அவருக்கு கடந்த 4 மாதங்களாக வீட்டிலே பயிற்சி கொடுத்துவந்துள்ளனர். அதனடிப்படையில் சிதம்பரம் ராமசாமி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை (15.12.2021) காலை குழந்தையின் திறமையை உலக சாதனையாகப் பதிவு செய்வதற்கு சமதள இரும்பு குழாய் அமைக்கப்பட்டதில் குழந்தை தொங்கியவாறு சென்றார். இதில் 70 மீட்டர் தூரத்தை 87 செகண்டுகளில் கடந்து உலக சாதனையைப் பதிவு செய்துள்ளதாக நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில் இதுபோன்ற சாதனையை யாரும் செய்யவில்லை. இது புதிய முயற்சி என ‘சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு’ பொதுமுகமையர் பிரபு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு சாதனைச் சான்று வழங்கப்பட்டது.

 

LKG  Little girl prepares for Olympics

 

இதுகுறித்து அவரது தாய் சத்யா கூறுகையில், “எங்களுக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் அக்ஷிதா, 5ஆம் வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது மகள் அனுஸ்ரீ (4). இவள், 3 வயது இருக்கும்போது வீட்டில் தொட்டில் கட்டிப் போடுவோம். அப்போது தொட்டிலில் படுக்காமல் எழுந்திருந்து அதன் மேல் ஏறுவாள். இதனைக் குழந்தைத்தனமாக எடுத்துக்கொண்டோம். பின்னர் கீற்றுக் கொட்டகையில் உள்ள கழியில் தொட்டில் கட்டும்போது, அதில் உள்ள கழியில் ஏறி தொங்கியவாறு இந்தக் கடைசிக்கும் அந்தக் கடைசிக்கும் செல்வாள். மேலும், வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் நெல்லிக்காய் மரம், புளியமரம் ஆகியவற்றில் கிடுகிடுவென ஏறி கிளைகளுக்குச் சென்றுவிடுவாள். இவளை இறக்குவதற்கு பெரும்பாடாக இருக்கும்.

 

தற்போது  நெல்லிக்காய் வேண்டும் என்றால் இவள்தான் எங்களுக்குப் பறித்துக் கொடுப்பாள். இதனைத்தொடர்ந்து அவள் தொங்கியவாறு செல்வதை வீடியோவாக பதிவுசெய்து சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு என்ற நிறுவனத்திற்கு உலக சாதனையாகப் பதிவு செய்வதற்காக அனுப்பினேன். அதனைத்தொடர்ந்து தற்போது இவளது சாதனை, உலக சாதனையாகப் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவளது திறமைக்கு நமது நாட்டைக் காக்க ராணுவத்திற்கு அனுப்பவும், ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கும் வகையில் இவளது திறமையை வளர்ப்போம்” என்றார்.


4 வயது குழந்தை உலக சாதனை செய்தது பள்ளியில் இருந்த அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.