கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் என மொத்தம் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. இதேபோல் கேரளாவிலும் சோதனையானது தேசிய புலனாய்வு முகமையால் மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரம் சென்னை காவல்துறை சார்பில் சென்னையில் நான்கு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய உளவுத்துறை மற்றும் மாநிலக் காவல்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு 96 நபர்களுடைய பட்டியலை சென்னை காவல்துறைக்கு அனுப்பி இருந்தது. இந்த 96 நபர்களும் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருக்கிறது என்றும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், நேற்று சென்னையில் மட்டும் இது சம்பந்தப்பட்ட 4 நபர்களுடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சென்னை வியாசர்பாடியில் உள்ள ஜாபர் சாதிக் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன், சிம் கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முகமது சலாவுதீன் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிசிடிவி பதிவுகள், 7 செல்போன்கள், பழனி பாபாவின் கடிதம் ஒன்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.