Skip to main content

தாராள மது விற்பனை.. விற்பது அமைச்சரின் உறவினர்களா..? 

Published on 26/04/2020 | Edited on 26/04/2020

 

"மாப்பிள்ளை இவர் தான்.! ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது.!" என்கின்ற பிரபலமான சினிமா டயலாக்கிற்கு பொருத்தமானவர் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் ச.ம.உ-வும், காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சருமான பாஸ்கரன். பெயருக்குத் தான் அவர் அமைச்சர், ஆனால் அமைச்சருக்குண்டான அனைத்து வேலைகளையும் செய்வது அவரின் குடும்பத்தார்களே என்ற பேச்சு இருக்க, அதற்கு ஒத்து ஊதும் வகையில் கள்ளத்தனமான மதுவிற்பனையில் அவரது பெயர் சிக்கிச் சின்னாபின்னமாகியுள்ளது.
 

Sivaganagai ADMK Baskaran ambalam


கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், தமிழ்நாட்டில் மதுவிற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இருப்பினும், ஆளுங்கட்சியினர் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர்களுடன் சேர்ந்து மதுவைத் திருடி வெளி சந்தையில் விற்று கொள்ளை லாபம் பார்த்துவந்தனர்.

ஊரடங்கு தளர்வு தேதிகள் மாறி மாறி அறிவிக்கப்பட, ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலுள்ள மது பாட்டில்களை எடுத்து, மொத்தமாக ஓரிடத்தில் பாதுகாப்பாக வைக்க முடிவெடுக்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தொடக்கத்தில் 38 கிராமப்புற கடைகள் காலி செய்யப்பட்டு மாவட்ட டாஸ்மாக் குடோனுக்குக் கொண்டு வரப்பட்டது.

அதன் பின் சமீபத்தில் 23- ஆம் தேதியன்று, நகரிலுள்ள அனைத்து மதுக் கடைகளையும் காலி செய்து, நகரின் முக்கிய இடத்தில் வைப்பதென தீர்மானிக்கப்பட்டு நகரிலுள்ள மதுக்கடைகளின் இருப்புகளைச் சேகரித்து பொதுவான இடத்தில் பாதுகாப்பாக வைத்தனர் டாஸ்மாக் டீம்.
 

http://onelink.to/nknapp


சிவகங்கையைப் பொறுத்தவரை மரகக்டை, காந்திரோடு, நேருபஜார், ரோஸ்நகர், ரயில்வே ரோடு, பேருந்து நிலையம், காமராஜர் காலனி மற்றும் முந்திரிக்காடு பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகளின் இருப்புகளைச் சேகரம் செய்து நகரில் டவுன் காவல் நிலையம் அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் வைத்தனர். எனினும் தமறாக்கிப் பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெற்று வர, அமைச்சரின் கைங்கரியம் இல்லாமல் இருக்குமோ.? என விவகாரம் பெரிதாகியுள்ளது.
 

DMK Anand



"அமைச்சரோட தமறாக்கி ஊருக்குப் போற வழியில் தான் காமராஜர் காலனி டாஸ்மாக் கடை இருக்கு.. கடை காலி செய்யப்படுவதற்கு முன்னால் மட்டுமல்ல, ஊரடங்கு அமலுக்கு வந்த நாள்முதலே அந்தக் கடையோட சாவி அமைச்சர் தரப்பு மற்றும் உறவினர்களிடம் தான் இருந்துச்சு. ஊரடங்கு காலமான இப்போது கூட 24 மணி நேரமும் இங்கு சரக்கு கிடைக்குது. சரக்கின் ரேட் மட்டும் அதிகம். சரக்கு கிடைத்தால் போதும் என நினைக்கிறவன் பணத்தைப் பார்க்கமாட்டான். 110- ரூபாய் குவாட்டர் இப்ப 550 ருபாய்..! தமறாக்கி, இடையமேலூர் பகுதியில் சர்வசாதாரணமாக கிடைக்குது. அமைச்சர் தரப்பு என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை தயங்குகிறது." என்கிறார் திமுக-வின் ந.செ.வான துரை ஆனந்த்.
 

டாஸ்மாக் நடத்தியவர்களோ, "பீர், உயர் ரக சரக்கு என அமைச்சர் தரப்பு காலி செய்தது மட்டும் ஏறக்குறைய ரூ15 லட்சத்துக்கும் மேல். நாங்க சம்பாதிக்க வேண்டியது. அமைச்சர் தரப்பே விற்பது எந்த வகையில் நியாயம்..?" என பொறுமுகின்றனர். இதுகுறித்து கருத்தறிய மாவட்ட டாஸ்மாக் மேலாளர் காளிமுத்துவைத் தொடர்புக் கொண்டோம். பதிலில்லை. இதன் உண்மையை விளக்க வேண்டியது அமைச்சரும், காவல்துறையும் மட்டுமே..! விளக்கம் தருவார்களா..?

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.