Skip to main content

மது விற்பனைக்கு உதவியாக இருந்த தாசில்தார், போலீஸ் எஸ்.ஐ. உட்பட 8 பேர் கைது!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் தவித்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.
 

 

 

Liquor

இதனிடையே கள்ளத்தனமாக மது விற்பனை தொடர்பான புகார்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குச் சென்ற நிலையில், அனைத்து மதுபானக் கடைகளையும் சீல் வைத்து, அதில் உள்ள மதுபானங்களின் இருப்பு குறித்து கணக்கெடுக்குமாறு கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கலால்துறையினர் மதுபானக் கடைகளை சீல் வைத்து, மதுபானம் இருப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

 

pppp



மேலும் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 30 மதுபானக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, சுமார் 10 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க மதுபானங்களை கடத்தி விற்பனை செய்வதற்கு போலீசார் மற்றும் கலால்துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக கிரண்பேடிக்கு புகார் சென்றது. 
 

http://onelink.to/nknapp

 

இதனைத் தொடர்ந்து கிரண்பேடி அதிரடியாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதாவது, புதுச்சேரி மாநிலத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தால், அந்த விற்பனை நடந்த காவல்நிலைய அதிகாரி காணொலி காட்சியில் விசாரிக்கப்படுவார். இந்த விசாரணையில் துணை நிலை ஆளுநர், டி.ஜி.பி, ஐ.ஜி, முதுநிலை எஸ்பி ஆகியோர் ஈடுபடுவோம்.
 

கள்ளச்சந்தையில் மதுவிற்பனை தொடர்பாகக் கலால்துறையும், காவல்துறையும் மாறி மாறி புகார் கூறிகொள்கின்றனர். கள்ளச்சந்தையில் மது விற்றால் கண்டறிவதுதான் காவல்துறையினரின் பணி, கள்ளச்சந்தையில் மது விற்பனைக்கு காரணம் காவல்துறையின் கவனக்குறைவுதான். காவல்துறையினரிடம் விசாரிப்பது போல், கலால்துறையினரையும் தலைமைச்செயலர், துறை செயலருடன் விசாரிக்க உள்ளேன் என உத்தரவிட்டிருந்தார்.

 

கிரண்பேடி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே மதுபானம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், மது திருடியதற்காகவும் தாசில்தார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லியனூர் சரக தாசில்தார் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் மடுகரை கிராமத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு ஆய்வுக்குச் சென்றபோது, அங்கிருந்த மதுபாட்டில்களை தாசில்தார் கார்த்திகேயன் அவரது தேவைக்கு எடுத்து கொண்டதாகவும், மதுபானம் கடத்தலுக்கு உதவி செய்ததாகவும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்துவந்த ஆனந்த்பாபு என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

 

இதனையடுத்து சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில், தாசில்தார் கார்த்திகேயன் மதுபானங்களை திருடியது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அரசு ஊரடங்கு உத்தரவை மீறல், தொற்றுநோயை பரப்புதல், கலால்துறை சட்டம் உள்பட 4 பிரிவின் கீழ் தாசில்தார் கார்த்திகேயன் மீது மடுகரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டிலிருந்த மதுபானங்களைப் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், எழுத்தர் சேதுராமன், ஓட்டுநர் கருணமூர்த்தி, எழுத்தர் செந்தில் மற்றும் ஓட்டுநர் சுந்தர், நெட்டப்பாக்கம் பகுதி உதவி காவல் ஆய்வாளர் அர்ஜுனன், காவலர் ஜெயராம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  
 

 

 

 

அத்துடன் இதுதொடர்பாக கவனம் செலுத்தத் தவறிய பாகூர் பகுதி காவல் ஆய்வாளர் அனில்குமார், வில்லியனூர் பகுதி உதவி காவல் ஆய்வாளர் நந்தகுமார், இருவரும்  ஆயுதப்படைக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

 

இதனிடையே புதுச்சேரி சட்டம் ஒழுங்கு பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்த ராகுல் அல்வால்க்கு பதிலாக காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால் புதுச்சேரி சட்டம் ஒழுங்கு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பினை காவல் கண்காணிப்பாளர் ரட்சணாசிங் கவனிப்பார். மதுபானக் கடத்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 12 வழக்குகளை ராகுல் அலுவால் விரிவாக விசாரிப்பார் எனக் காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.