liquor nagai district police

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர, டாஸ்மாக், பார்கள் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்கள் கிடைக்காததால் ஒருவர்கள்ளச்சாராயம் காய்ச்சியதோடு மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Advertisment

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்துள்ள கிராமம் தெற்கு பொய்கைநல்லூர். அங்கு பூஞ்சோலை என்கிற தமிழ்ச்செல்வன் சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் காய்ச்ச முடிவு எடுத்துள்ளார். அதன்படி தனது வீட்டின் பின்புறத்தில் அடுக்கு பானைகளை வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளார். சாராயம் காய்ச்சியதோடு விட்டு விடாமல் அதனை வீடியோ எடுத்து, "ஆண்டவன் யாரையும் விட்டதில்லை, வாழ்க்கையின் வட்டத்திலே," என்கிற பாடல் போட்டு டிக்டாக்கிலும் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வனை கைது செய்து தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.