தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகில் உள்ள புதுவிடுதியில் அருள் மற்றும் இளங்கோ என்பவர்கள் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக தகவல் அறிந்து பட்டுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையினர் அவர்களை பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்தில் இல்லை.
பின்னர் மது விற்பனை செய்வதாக கூறப்பட்ட புதுவிடுதி அருள் மற்றும் அவரது உறவினராக ரவுடி பட்டியலில் உள்ள இளங்கோ ஆகிய இருவரும் புதுவிடுதி பாலம் அருகே நிற்பதை அறிந்து, அவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை அதிகாரி செந்தில்குமார் சென்றுள்ளார்.
அங்கு அதிகாரி செந்தில்குமாரை சாராய வியாபாரி அருள் மற்றும் ரவுடி பட்டியலில் உள்ள இளங்கோ கட்டையால் தாக்கியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. காவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.