Published on 31/12/2023 | Edited on 31/12/2023
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முட்டைக் கண்ணன் என்கிற கவுதம் (24). இவர், உள்ளூரைச் சேர்ந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஓமலூர் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, கவுதமுக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். டிச. 29ம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.