Life sentence for four in karur

Advertisment

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு வெளியே வராண்டாவில் படுத்திருந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. பாஸ்கர் பெயிண்டர் வேலையும் விவசாயக் கூலி வேலையும் பார்த்து வந்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு இரவு 8 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே வராண்டாவில் படுத்து இருந்த பாஸ்கரை முன்விரோதம் காரணமாக உருட்டு கட்டையால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். கணவரை கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாங்கல் காவல் நிலையத்தில் பவித்ரா புகார் அளித்திருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் சரவணன், பாலன் என்ற பாலசுப்பிரமணியன், ஜெயபால், ஜீவா ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.