சென்னையில் இன்றுமுதல் (24.07.2021) நூலகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தில் புத்தகங்களை சுத்தம் செய்து வரிசைப்படி அடுக்கிவைத்துள்ளனர். வாசகர்கள் வருகையின்போது அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்று வரை நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும் கடந்த 20 ஆம் தேதி (20.02.2024) 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதே சமயம் பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.
அந்த வகையில் சட்டபேரவையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் நூலகம் அமைக்கப்படுவது தொடர்பாக நேற்று (21.02.2024) கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளிக்கையில், “சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாக, விளக்கமாக, விரிவாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருக்கிற காரணத்தால் என்னுடைய வாழ்த்துகளையும் மனதார நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நேற்றைய தினம் விவாதத்தின்போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வினாவிற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதேநேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அது எங்கே அமையவிருக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள், எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்திற்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.
மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும். ஆனால் வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டு விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.
சிதம்பரம் நகரத்தின் 68 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த காசு சிதம்பரம் கிளை நூலகம் முதலில் காசுகடைத்தெரு, பின்னர் சின்ன காஜியார் தெருவில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்தக் கட்டிடம் பழுது ஏற்பட்டு மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி பல லட்ச எண்ணிக்கையில் இருக்கும் புத்தகங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டது. மேலும், நூலகத்திற்கு ஏற்ற சரியான இடவசதி இல்லாததால் நூலகத்தை அரசு இடத்தில் நவீன முறையில் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடந்து 2014-ல் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போது மாநில செயலாளராக இருக்கும் கே. பாலகிருஷ்ணன் அதே நேரத்தில் சிதம்பரம் நகர மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பெளஜியா பேகம் இருந்த போது, நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான 4 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை நூலகம் கட்டுவதற்கு இலவசமாக தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் அப்போதிருந்த நகர்மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானத்தின் பெயரில் 2014- ஆம் ஆண்டு நூலகம் கட்ட 4 ஆயிரம் சதுர அடி இடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிளை நூலகமாக செயல்பட்ட நூலகம், வருவாய் கோட்ட நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நூலகம் கட்ட அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், நூலகம் கட்டமுடியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியராக பணியாற்றிய மதுபாலன் சிதம்பரத்தில் நவீன முறையில் நூலகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் நமக்கு நாமே திட்டம் மூலம் சிதம்பரம் பகுதியில் உள்ள வணிகர்கள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து நூலகம் கட்டுவதற்கு மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ 16 லட்சம் நிதி திரட்டினார் .பின்னர் அவர் பணி உயர்வு பெற்று மதுரைக்கு சென்றுவிட்டார்.
இதனை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுக்கு முன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நூலகம் கட்ட நமக்கு நாமே திட்டத்தில் ரூ 32 லட்சம் மாணியமாக அரசு வழங்கியதால் மொத்தம் ரூ 48 லட்சத்தில் 1800 ச.அடியில் நூலகத்திற்கு தரைதளம் நவீன முறையில் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ந்தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்தார். இதனையொட்டி நூலகத்திற்கான சாவியை சம்பந்தபட்ட நூலகத்துறை ஆலுவலர்கள் அருள் மற்றும் ரகுநந்தனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதிய நூலக கட்டிடத்தில் ஜன 12-ந்தேதி மாலை நடைபெற்றது.
இதில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் கலந்து கொண்டு நூலக சாவியை வழங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர் மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், ராஜன், கல்பனா மற்றும் திமுக நகர துணைச்செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.