Skip to main content

ஆளுநரிடம் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கொடுத்த கடிதம்!

Published on 13/04/2018 | Edited on 13/04/2018


 

cognizent

 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 1-4-2018 அன்று நடைபெற்ற “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்” காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்  ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததையும், மேலும் மூன்று மாத கால அவகாசம் கேட்பதையும் கண்டித்தும், உடனடியாக நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரமுள்ள ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்கக் கோரியும், காவிரி டெல்டா பகுதியிலிருந்து தொடங்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் - அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாக பங்கெடுத்து, தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி, “காவிரி உரிமை மீட்புப் பயணம்” மேற்கொள்வது” என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஏப்ரல் 7- அன்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் திருச்சி முக்கொம்பில் தொடங்கி ஏப்ரல்-12 அன்று கடலூரில் நிறைவடைந்த “காவிரி உரிமை மீட்பு பேரணி”யை தொடர்ந்து இன்று (13-4-2018) நண்பகல் 12.30 மணி அளவில்  கிண்டி, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அவர்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள்  நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர்.


அக்கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:-


மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு

வணக்கம்,

 
திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , விடுதலை சிறுத்தைகள் கட்சி,  மனித நேய மக்கள் கட்சி,  விவசாய சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் - எல்லாவற்றையும் விட முக்கியமாக தமிழக மக்களின் சார்பாக “2007-ஆம் வருட காவிரி சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண்: 2453, 2454 மற்றும் 2456-ன்” கீழ் உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய இறுதி தீர்ப்பினை உடனடியாக நிறைவேற்ற மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தக்க நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை மனுவினை அளிக்கிறோம்.

 

பல ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி நீர் தாவாவை முடிவுக்கு கொண்டு வரவும், நிரந்தர தீர்வு காணவும் 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பாணைக்கு (Decree) இணையான இறுதி தீர்ப்பை செயல்படுத்த ஆறு வார காலத்திற்குள் ஒரு செயல் திட்டத்தை (Scheme) வகுக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கட்டளை பிறப்பித்தது மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் உடனடி பார்வைக்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அந்த வாசகங்களை அப்படியே கீழே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 

“உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கும், சம்பந்தப்பட்ட நதிநீர் தாவா மாநிலங்களுக்கு எங்கள் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கிடைப்பதற்கும் ஏதுவாக இன்றிலிருந்து ஆறு வாரங்களுக்குள் ஒரு செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் கட்டளையிடுகிறோம். அப்படிக்கூறும் போது தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மாத அடிப்படையிலான தண்ணீர் முறைப்படி திறக்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மானமாக தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான காலக்கெடு எந்த காரணத்தின் அடிப்படையிலும் நீட்டிக்கப்பட மாட்டாது என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்துகிறோம்” (பத்தி 403- பக்கம் 457)

 

மேற்கண்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் வெளிப்படையான தெளிவான அர்த்தத்தின் மூலம் கீழ்கண்ட மூன்று விஷயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது என்னவென்றால்:

a)     செயல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

b)     அந்த செயல் திட்டம் ஆறு வாரங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.

c)     எந்த காரணத்திற்காகவும் ஆறு வாரத்திற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது.

செயல்திட்டம் (Scheme) என்ற வார்த்தையின் அர்த்தம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் “ஆணையம்” என்பது மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டம் 1956-ன் பிரிவு 6A(2)ன் கீழ் தெளிவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டம் ஆகிய மூன்றையும் ஒரு சேரப்படித்துப் பார்த்தாலே மத்திய அரசு உருவாக்க வேண்டிய செயல் திட்டம் என்ன என்பது குறித்து எவ்வித சந்தேகமும் எழுவதற்கு நிச்சயமாக வாய்ப்பு துளியும் இல்லை. இருந்த போதிலும் “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை” என்று உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கே தவறான அர்த்தம் கற்பிக்கும் வகையில் மத்திய நீர் பாசானத்துறை அமைச்சர் 27.2.2018 அன்று இந்து ஆங்கிலப் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி திரித்து கருத்து வெளியிட்டு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் நிலைப்பாட்டை மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் எடுத்தார். “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இல்லை” என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் பேட்டியளித்தார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை செயலாளரின் பேட்டிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை  அவமதிக்கும் உள்நோக்கம் நிறைந்தது மட்டுமின்றி, அப்படிப் பேட்டியளித்து தங்களின் அலுவலக கடமையிலிருந்தும் அவர்கள் தவறினார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள வாசகங்களை கீழ்கண்டவாறு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

“நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தும் அமைப்பு- (அதாவது காவிரி மேலாண்மை வாரியம்):

 

“இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அமைப்பு பற்றியும் நடுவர் மன்றம் கூறியிருக்கிறது, அவ்வாறு கூறும் போது 1956 ஆம் ஆண்டு சட்டத்தில் மத்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பிற்கு “செயல் திட்டம்” (ஸ்கீம்) ஒன்றை உருவாக்குவதற்கு அதிகாரம் அளித்து 1980 ஆம் வருட சட்ட திருத்தத்தின் மூலம் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 6A-ன் சாரம்சத்தை கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது. நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு அந்த தீர்ப்புக்கு “தீர்ப்பாணை” (டிகிரி) அந்தஸ்துப் பெறுகிறது என்ற பிரிவு 6 சுட்டிக்காட்டியிருப்பதையும் நடுவர் மன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த “ஸ்கீம்” உருவாக்குங்கள் என்று உத்தரவிடுவது மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டத்தின் அடிப்படையில் முரண்பட்ட அம்சமாக இருக்கும் என்று நடுவர் மன்றம் எண்ணியது. அதனால் 1980 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நதி நீர் தாவா சட்டம் இறுதி தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பு, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்ட நடுவர் மன்றம், அப்படியொரு அமைப்பு உருவாக்க பரிந்துரைக்கும் அதிகாரம் நடுவர் மன்றத்திற்கு இருக்கிறது என்று முடிவு செய்தது. ஆகவே பக்ரா பீஸ் மேலாண்மை வாரியம் போன்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் பரிந்துரைத்தது. பொருத்தமான அமைப்பு ஒன்றை உருவாக்கவில்லை என்றால் இறுதி தீர்ப்பை ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய முடியாது என்று நடுவர் மன்றம் எண்ணியது. இறுதி தீர்ப்பின்படி பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அணைகளின் இயக்கத்தையும், தண்ணீர் திறந்து விடுவதை முறைப்படுத்தும் மேற்பார்வை அதிகாரத்தையும் காவிரி மேலாண்மை வாரியம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே காவிரி மேலாண்மை வாரியத்தால் அமைக்கப்படும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அந்த பணிகளுக்கு துணையாக இருக்கும் என்றெல்லாம் சுட்டிக்காட்டி இறுதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் பரிந்துரைத்து, அந்த வாரியத்தின் உறுப்பினர்கள், பணிகள் உள்ளிட்டவை பற்றி நடுவர் மன்றம் பரிந்துரை செய்தது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினர்களாக யார் யார் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்து அதன் பணிகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறது” (பத்தி 290. பக்கம் 336)

 

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பில் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான அமைப்பு உருவாக்குது தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மேற்கோள் காட்டி தனது தீர்ப்பில் முழுமையாக விளக்கியிருக்கிறது.  இவ்வளவு தெளிவாக இருந்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு தவறான அர்த்தம் கற்பிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இது தவிர நதி நீர் தாவாவிற்கு உட்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களின் கூட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள “ஸ்கீம்” பற்றி கருத்துக் கேட்டார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீது இப்படியொரு கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துவதற்கு மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு நிச்சயம் அதிகாரம் இல்லை என்பதே எங்கள் கருத்து. ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் கடமையை தட்டிக் கழிக்கவே மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற எண்ணத்திற்குத்தான் எங்களால் வர முடிகிறது. உச்சநீதிமன்றத்தின் ஆறு வாரக் காலக்கெடு முடியும் வரை காத்திருந்து விட்டு மத்திய அரசு “விளக்கம்” கேட்டது எங்களுக்கு ஏமாற்றமாகவும் பெரும் கவலையளிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. தமிழக மக்களின் குடிநீர் ஆதாரங்களும், லட்சக்கணக்கான விவசாயிகளின் விவசாயமும் ஈடு கட்ட முடியாத இழப்பிற்கு உள்ளாகும் என்று நன்கு தெரிந்திருந்தும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக மட்டுமே ஒரு மத்திய அரசே இப்படி செயல்பட வேண்டுமா?

 

மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதாலும், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட சட்டப்படியான தீர்ப்பை அமல்படுத்தும் நோக்கம் மத்திய அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படவில்லை என்பதாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மாநிலம் முழுவதும் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக மாநில அரசே அனைத்துக் கட்சி கூட்டத்தை 22.2.2018 அன்று கூட்டியது. அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கூடி காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலக்கெடுவிற்குள் அமைப்பது பற்றி வலியுறுத்தவும், மாநிலத்தில் உள்ள சூழ்நிலைகளை விளக்கிடவும் மாண்புமிகு பிரதமரை சந்திப்பது உள்ளிட்ட மூன்று முக்கியத் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால்   அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்கவோ, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும் அவமதிக்கும் விதத்திலும் பேசி வருவதை கண்டிக்கவோ துரதிருஷ்டவசமாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் முன்வரவும் இல்லை. ஆர்வமும் காட்டவில்லை. 

 

இது மட்டுமின்றி “காவிரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 15.3.2018 அன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழரை கோடி மக்களின் விருப்பங்களையும், உணர்வுகளையும் அந்த தீர்மானம் வெளிப்படுத்துகிறது என்று நாங்கள் தீர்மானமாக நம்புகிறோம். எங்களது முயற்சிகள் அனைத்தும் உதாசீனப்படுத்தப்பட்டதோடு மட்டுமின்றி, நாங்கள் வைத்த கோரிக்கைகளும் மத்திய அரசின் காதுகளில் விழவில்லை. சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு கடைமைப்பட்டு இருக்கிறது என்பது மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்குத் தெரியும். அதனால் காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு துணை போகும் விதத்தில் அதிமுக அரசு அடிபணிந்து கிடக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றும், அதன்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தகுதியில்லாமல் மாநில அரசு தத்தளித்து நிற்கிறது. ஊழலில் திளைக்கும் இந்த அதிமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்திருக்கிறது. ஆகவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு உறுதியுடன் அழுத்தம் கொடுக்கும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் இழந்து விட்டார்கள்.

 

இந்நிலையில் ஆறுவாரத்திற்குள் “ஸ்கீம்” உருவாக்காமல், கடைசி நேரத்தில் “விளக்கம்” கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. பாராமுகத்துடன் இருக்கும் மத்திய அரசு, செயலற்ற மாநில அரசு, வதைக்கும் கடுமையான வறட்சி போன்றவற்றால் ஏற்கனவே கடும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசு காட்டி வரும் அசாதரணமான தாமதம் மற்றும் அநியாயமான செயல்பாடுகள் தகர்த்து விட்டது. மத்திய- மாநில அரசுகளின் கூட்டுத் தோல்வியால் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தொடர்ந்து ஆறு வருடங்களாக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி நீர்பாசனத்திற்காக திறக்கப்படவில்லை. இப்போதைய இதே நிலை நீடித்தால் இந்த வருடமும் அதே நிலை ஏற்பட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகி விடும் என்பது மட்டுமல்ல- விவசாயத்தை கைவிட்டு மக்கள் வேறு தொழில்களை நாட வேண்டிய நெருக்கடி உருவாகும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பிழைப்புத் தேடி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய அவல நிலைமை ஏற்படும். இதை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், கடையடைப்புகள், சாலை மறியல்கள் நடத்தி தங்களது கோபத்தையும், ஆத்திரத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மேலும் மூன்று மாத காலம் மத்திய அரசு அவகாசம் கேட்டிருப்பது தமிழ்நாட்டு மக்களை திகைக்க வைத்திருக்கிறது. ஆகவே  உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதை மத்திய அரசு திட்டமிட்டு தாமதம் செய்கிறதே தவிர, நான்கு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவாவிற்கு அளிக்கப்பட்ட சட்டபூர்வமான தீர்வை நிறைவேற்ற முன்வரவில்லை என்பது புரிகிறது.

 

தமிழ்நாட்டின் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக அமைப்புகள், விவசாய அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறோம். கடையடைப்பிற்கு முன்னோட்டமாக 1.4.2018 அன்று தி.மு.க. தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் சாலை மறியல் நடத்தப்பட்டது. 5.4.2018 அன்று அறிவிக்கப்பட்ட முழு அடைப்பிற்கு தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் ஏகோபித்த ஆதரவு கிடைத்து அமோக வெற்றி பெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திரு மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய எதிர்கட்சித் தலைவர்களுடன் காவிரி உரிமை மீட்பு பயணம் 7.4.2018 அன்று திருச்சியில் துவங்கி, மகத்தான வெற்றி பெற்று இன்றைக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களை சந்திப்பதுடன் நிறைவு பெறுகிறது. ஆனால் சட்டபூர்வமான காவிரி உரிமைகளுக்கான எங்களது அமைதியான அறவழிப் போராட்டம் இத்துடன் நின்று விடாது- தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை இதே பேரார்வத்துடன் அந்த போராட்டம் தொடரும் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஆகவே மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்குள்ள அரசியல் சட்ட அதிகாரத்தினைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரிவித்து, 3.5.2018-க்கு முன்பாகவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும், “ஸ்கீம்” என்றால் என்ன என்று “விளக்கம்” கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவினை உடனே திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு மேலும் தாமதிப்பது தமிழ்நாட்டு மக்களின் நலனை மிக மோசமாக பாதிக்கும் என்றும், தற்போது நடைபெற்று வரும் ஜனநாயக ரீதியியான அறவழிப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் உடனடியாக  செயல்படுத்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விரைந்தும், தீவிரமாகவும் தலையிட வேண்டும் எனவும், இந்த மாநிலத்தின் முதல் குடிமகன் என்ற முறையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் இதனடியில் கையொப்பமிட்டுள்ள தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்!. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதிய ஜனதா கட்சியும், நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார். 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!.

வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.  தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ‘புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு, ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்’ என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இதே ஆர்வமும், சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும். தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும். தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும். 

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம். ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்பு கடிதம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
letter of retired IAS, IPS officers to Election Commissioner
தலைமை தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இது தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.

ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.