“Let's save wild animals” - Collector Prabhu Shankar

Advertisment

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா 2022 குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், “வன வார விழா ஆண்டுதோறும் அக். 2 முதல் அக். 8 வரை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறோம். நாம் இயற்கை சமநிலை உருவாக்கக்கூடிய வகையில் வனங்கள்,வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் அவ்வாறு பாதுகாப்பதனால் மனித குலத்திற்கு நன்மைகள் ஏற்படும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வகை விலங்குகள் அழிவதன் காரணமாக உணவு சுழற்சி தடைப்பட்டு ஒரு வகை விலங்குகள் எண்ணிக்கை கூடுதலாகவும். ஒரு வகை விலங்கு எண்ணிக்கை குறைவாகவும் உள்ளதால் உணவு சுழற்சி தடைப்படுகிறது. நமது கடவூர் காட்டுப்பகுதியில் வாழும் அறிய வகை தேவாங்கு விலங்கு விவசாயத்தை அழித்து வரும் பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் விவசாயத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு உணவு சுழற்சி நடைபெறுகிறது. ஆகையால் வனங்களையும் விலங்குகளையும் நாம் பாதுகாக்க முன்வர வேண்டும்.

அதேபோல் அனைத்து மாணவ, மாணவியர்கள் ஆண்டிற்கு ஒரு மரம் வளர்ப்பேன் என்று உறுதி மொழியை இன்று எடுத்துக் கொள்வோம். ஆகையால் கரூர் மாவட்டத்தில் மரம் வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கி அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும் நெகிழி பயன்படுத்தாமல் அனைவரும் நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமையாகும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து வனவிலங்குகளை காப்பாற்றுவோம். தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். எனவே அனைவரும் மஞ்சப்பைகளை பயன்படுத்தி நெகிழி இல்லாத மாவட்டமாக உருவாக்க முன்வர வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறினார்.