Skip to main content

''நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்!"; விடுதலையான மாணவி வளர்மதி அதிரடி!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட சேலம் மாணவி வளர்மதி, இன்று (ஜூலை 5, 2018) மாலை 3.45 மணிக்கு சேலம் பெண்கள் கிளைச்சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

valarmathi


சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் கடந்த ஜூன் 19ம் தேதியன்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச்சாலைக்கு நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர்களின் அழைப்பின்பேரில் இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், இதழியல் மாணவியுமான வளர்மதி (24), அங்கு சென்று விவசாயிகளிடம் பரப்புரை செய்தார்.


அப்போது அவர், ''நிலம் நம்முடைய உரிமை. அதை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது. அரசாங்கம் அராஜகமான முறையில் நிலத்தை பிடுங்குகிறது. எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஓரணியில் ஒன்றுதிரள வேண்டும்,'' என்று பேசினார்.


இதையடுத்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, கலகம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அவர் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

 

valarmathi


இதற்கிடையே, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு பட விழாவில், ''காவல்துறையினர் தாக்கினால் நாமும் திருப்பித் தாக்குவோம்,'' என்று வளர்மதி பேசியிருந்தார். காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது சில நாள்களுக்கு முன்பு புதிதாக ஒரு வழக்கையும் காவல்துறையினர் பதிவு செய்தனர்.


இவ்விரு வழக்குகளிலும் வளர்மதிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் இருந்து இன்று மாலை 3.45 மணிக்கு விடுதலை ஆகி வெளியே வந்தார்.


சிறை வாசல் முன்பு நின்றபடி அவரும், அவருடைய சக தோழர்களும், ''எதிர்ப்போம் எதிர்ப்போம்... நாசகார திட்டங்களை எதிர்ப்போம் எதிர்ப்போம்...'', ''அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம் அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம்,'' என்று முழக்கங்களை எழுப்பினர்.


பின்னர்  செய்தியாளர்களிடம் வளர்மதி கூறுகையில், ''மக்களிடம் பேசியதற்காகவே என்னை கைது செய்துள்ளனர். இதை அரசின் தொடர்ச்சியான அடக்குமுறையாகவே பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக விவசாய நிலத்தையும், இயற்கையையும், வாழ்வாதாரத்தையும் அழித்து, அனைத்து மக்களின் எதிர்ப்பையும் மீறித்தான் எட்டுவழிச்சாலை திட்டத்தை கொண்டு வருகின்றனர்.


இந்த திட்டத்துக்கு மக்கள் தானாக முன்வந்து நிலம் கொடுத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி அப்பட்டமாக பொய் சொல்கிறார். தற்கொலை பண்ணிக்கிறோம் என்று நிலத்தைக் கொடுக்காமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராடணும். 


மக்கள் முன்னால் போய் நின்றாலே கைது என்ற அடக்குமுறை எங்கள் மீது இருந்தாலும்கூட, தொடர்ச்சியாக எங்கள் போராட்டம் இருந்து கொண்டே இருக்கும். எல்லா மக்களையும் போய் நேரில் சந்திப்பேன். அது எங்கள் சொந்தங்கள் உள்ள பகுதி. நிச்சயமாக எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்,'' என்றார் வளர்மதி.


வளர்மதி மீது சென்னை வடபழனி மற்றும் சேலம் வீராணம் ஆகிய இரண்டு காவல்நிலையங்களும் வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை வழக்கு தொடர்பாக அவர் தினமும் காலை 10 மணிக்கு வடபழனி காவல்நிலையத்திலும், சேலம் வழக்கில் அவர் தினமும் காலை 10.30 மணிக்கு வீராணம் காவல் நிலையத்திலும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றங்கள் நிபந்தனை விதித்துள்ளது. ஒரே ஆள் ஓரே நேரத்தில் சேலம், சென்னையில் ஆஜராக வேண்டிய விந்தையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .