தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 6,120 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 9,916ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி ஒன்று கரோனா பாதிப்பு 1,489 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,23,537 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
சென்னையில் மட்டும் இன்று 972 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது1,223என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில்26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,759 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்பொழுது வரை 1,21,828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 23,144 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 32,51,295 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். கோவையில்-911, கன்னியாகுமரி-223, செங்கல்பட்டு-531, ஈரோடு-397, சேலம்-310, திருவள்ளூர்-256, நாமக்கல் -189 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.