Skip to main content

மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை... நடவடிக்கை எடுக்காத வனத்துறையினர்

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

Leopard threatening people ... Foresters not taking action

 

கோவை அருகேயுள்ள மதுக்கரை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதியாகும். நேற்று (28 ஜன.) நள்ளிரவு சுமார் ஒருமணியளவில், குவாரி ஆஃபிஸ் காந்தி நகர் பகுதி தமிழன்னை வீதியில் வசிக்கும் அரசு போக்குவரத்து ஓட்டுநர் சீனிவாசன் என்பவருடைய வீட்டின் சுற்று சுவர்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அவர்களின் நாயைக் கடித்துக் குதறியது.

 

இதைப் பார்த்து பதறிப்போன அவர்கள், உடனடியாக வனத்துறைக்குத் தகவல் கொடுக்க, சரியான நேரத்திற்கு வராமல் வழக்கம்போல் நேரம் கடந்தே வந்தனர். அதன்பின்னர், விடிந்தப் பிறகு உயிருக்குப் போராடும் நாயைக் காப்பாற்ற கால்நடை மருத்துவர்களை அழைத்துள்ளனர். அவர்களும் யாரும் வராததால் இறுதியில் அந்த நாய் இறந்து போனது. 

 

இதனால் விரக்தி அடைந்த அந்தப் பகுதி மக்கள், இதற்கு சாலை மறியல் ஒன்றேதான் சரியான தீர்வு என்று முடிவு செய்தனர். இன்று வரை அந்த சிறுத்தை அந்தப் பகுதியில்தான் நடமாடி வருகிறது. ஆனால் அதை விரட்டும் வனத்துறையின் நடமாட்டத்தைத்தான் காணவில்லை. நேற்று ஆட்டைக் கடித்து, இன்று நாயைக் கடித்துள்ள சிறுத்தை, நாளை மனிதனைக் கடிக்கும். அதிலிருந்து நாமும் நம் பிள்ளைகளும் தப்பிக்க என்ன வழி என்று அந்தப் பகுதி மக்கள் யோசித்தனர்.

Leopard threatening people ... Foresters not taking action

 

உடனே நேற்று மாலை மதுக்கரை குவாரி ஆஃபிஸ் அருகே கோவை, பாலக்காடு ரோட்டில் சாலை மறியல் செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்தனர். அதற்குள் தகவலறிந்து வந்த காவல்துறையும், எப்போதும் தாமதமாக வரும் வனத்துறையும் திரண்டு வந்த பெண்களைத் தடுத்து சமரசம் பேசியும், முடிவு எட்டப்படவில்லை 

 

இறுதியில் இரண்டு நாட்களுக்குள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிப்பதாக, மதுக்கரை வனத்துறையினர் மறியலை கைவிட வேண்டுக்கோள் விடுத்தனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்ற அந்தப் பகுதி பெண்கள், வேறு வழியின்றி மறியல் திட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், “சொல்லியபடி இரண்டு நாட்களுக்குள் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும், பிடிக்கவில்லை என்றால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம்” என்று பொதுமக்கள் உறுதிபடச் சொல்லிவிட்டு கலைந்தார்கள்.

 

“வனத்துறையினர் அவ்வப்போது பெயரளவில் ரோந்து வந்து செல்வார்கள். முதலில் ஆட்டைக் கடித்த சிறுத்தை, இப்போது நாயைக் கடித்துள்ளது. அடுத்து மனிதர்களைக் கடிக்கும் நிலை உருவாகும்.

 

Leopard threatening people ... Foresters not taking action

 

அதற்குள் வனத்துறையினர் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி வனத்தைச் சுற்றி உயரமான காம்பவுண்ட் சுவர் கட்டி, கம்பி வேலிகள் அமைத்து, கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,” என்றனர்.

 

இந்நிலையில் நேற்று இரவு நாயைக் கடித்த சிறுத்தை, இன்னும் அங்கிருந்து போகாமல் அந்த மலையிலேயே சுற்றித் திரிகிறது. இதனால் இன்று இரவு என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.