கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்குக் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதியர் குடியேறி உள்ளனர். இந்நிலையில் கடந்த 20/06/2025  அன்று இந்த தம்பதியின் 4 வயது பெண் குழந்தை காளியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று அந்த சிறுமியை, அவரது தாய் கண் முன்னே தூக்கிச் சென்றது. இதுகுறித்து சிறுமியின் தாய் வனத்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் சிறுமியை வனத்துறையினர் தீவிரமாகத் தேடினர். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் அடித்து சிறுமியை தேடும் பணி நடைபெற்றது.

இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்குக் குழுமினர். அடுத்த நாளான 21/06/2025 அன்றும் இரண்டாவது நாளாக காலை 7:00 மணி முதல் வனத்துறையினர் தேடுதல் பணி நடைபெற்றது. மோப்ப நாய் மற்றும் ட்ரோன் மூலம் தேயிலைத் தோட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று தேடினர். இடையே இடையே அந்த பகுதியில் மழை பொழிந்ததால் தேடுதலில் சிறிது தொய்வும் ஏற்பட்டது.

பல மணி நேர தேடுதலுக்குப் பின் குழந்தையின் உடலானது மீட்கப்பட்டது. சிறுமியின் உடலில் பல்வேறு பாகங்கள் சிறுத்தையால் உட்கொள்ளப்பட்ட நிலையில் சிதைந்த நிலையில் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உடல் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

சிறுமியின் உடல்களை சிதைத்து பல்வேறு பாகங்களை சிறுத்தை உட்கொண்டதால் இது ஆட்கொலி சிறுத்தையாக கருதப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருந்தனர். இந்நிலையில் 6 நாட்களாக வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு வைத்திருந்த நிலையில் ஆட்கொல்லி சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் பச்சைமலைப் பகுதியில் பணிபுரியும் தேயிலைத் தோட்ட பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.