A leopard lurking for the fourth day; Sniffer dogs to get into the field

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து நான்கு நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

ஆரோக்கியநாதபுரம் பகுதியில் வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் என இரண்டு ஆடுகள் சிறுத்தையால் குதறப்பட்டு உயிரிழந்து கிடந்தது.

கூடுதலாக 100 காவல்துறையினர் வனத்துறையினரின் பணிகளுக்கு பாதுகாப்பு கேட்கப்பட இருப்பதாக வனத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் 8 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தை பதுங்கியுள்ள பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் நாகநாதன் தலைமையிலான துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.