Skip to main content

பீதியை கிளப்பிய சிறுத்தைக்குட்டி சிக்கியது

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு கிராமம் மலையடிவார பகுதியாக இருப்பதாலும், விவசாயத்தை அடிப்படையாக கொண்டிருப்பதாலும் கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி இப்பகுதியில் “விசிட்” அடிப்பது வழக்கம்.

கடந்த மாதம் இக்கிராமத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக அம்பாசமுத்திரம் வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியை சேர்ந்த ராமர் வீட்டருகே கண்காணிப்புக் கேமராவைப் பொருத்தினார்.

 

Leopard catche in nellai


இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி, ராமர் வீட்டிலிருந்த ஆடு வனவிலங்கு தாக்கி இறந்த கிடந்தது. வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், ராமர் வீட்டருகே சிறுத்தை வருவதும், அங்கிருந்த ஆட்டை கொன்று தின்ற காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தன.

இதனையடுத்து, கடந்த மாதம் 10ம் தேதி அண்ணா நகரை ஒட்டியுள்ள “குமளம்” பொத்தை அடிவாரத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, அதில் வெள்ளாட்டைக் கட்டி கண்காணித்து வந்தனர். இப்பணியில் வனத்துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

வழக்கம் போல், நேற்று முன்தினம் மாலை கூண்டில் வெள்ளாட்டை கட்டிவிட்டு வன உயிரின காப்பாளர் ஸ்டீபன் ஞானராஜ், வனக்காப்பாளர் ராமர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள், நேற்று அதிகாலையில் கூண்டில் சிறுத்தை சிக்கியதைப் பார்த்தனர். இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் ரேஞ்சர் கார்த்திகேயன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை காட்டிற்குள் விடும் முயற்சியில் இறங்கினர்.

 

Leopard catche in nellai

 

இதற்கிடையில், கூண்டில் சிறுத்தை சிக்கியதை அறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பயிற்சி போலீசார் அப்பகுதியில் திரண்டனர். அவர்கள், சிறுத்தையை மொபைலில் படம் எடுக்க முயன்றனர். அதை தடுத்த வனத்துறையினர் அவர் சிறுத்தையை பார்க்க அனுமதித்தனர். மீறி படமெடுத்த மொபைல்களை வனத்துறையினர் பிடுங்கி படத்தை அழித்தனர். சிலர், சிறுத்தையை பார்க்கக் கூண்டருகே சென்ற போது, சிறுத்தை ஆத்திரமடைந்து உறுமி பாய்ந்தது. சில தருணங்களில் கோபத்தில் கூண்டிற்குள் கிடந்த ஆட்டைக் கடித்து கோபத்தை வெளிப்படுத்தியது. இதற்கிடையில், டிராக்டர் வந்தது. அதில், சிறுத்தைக் கூண்டை ஏற்றி முண்டந்துறைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து அம்பாசமுத்திரம் ரேஞ்சர் கார்த்திகேயன் கூறுகையில் கூண்டில் சிக்கியது இரண்டு முதல் மூன்று வயதுக்குள் உள்ள பெண் சிறுத்தைக் குட்டி. இச்சிறுத்தை குட்டி ரிசர்வ் பாரஸ்ட் பகுதியில் விடப்படுகிறது என்றார். பிடிபட்ட  சிறுத்தை கன்னிகட்டி பகுதியில் விடப்பட்டது.

பிடிபட்ட சிறுத்தைக் குட்டியை பார்க்க வந்திருந்த ராமர் மனைவி அந்தோணி அம்மாள் கூறுகையில், 8 ஆடுகளை சிறுத்தைக் கொன்று தின்றுள்ளது என்றார். அவரது பக்கத்து வீட்டு இளம் பெண் பேச்சியம்மாள்  கூறுகையில், ஒரு மாதமாக அச்சத்தில் இருந்து வந்தோம். வேலைக்கு செல்ல கூட பயந்தோம். இரவு 7 மணிக்கு மேல் கதவை அடைத்து கொண்டு வீட்டிற்குள் இருந்தோம். இப்போது, சிறுத்தை பிடிபட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இதற்கிடையில், பாதுகாக்கப்பட்ட வன பகுதியிலோ இல்லது அதன் அருகிலோ வன விலங்குகளை கூண்டு வைத்துப் பிடிப்பதும், அதை அதன் வசிப்பிடத்தில் இருந்து வேறு ஒரு இடத்தில் விடுவதும் வன உயிரின சட்டத்திற்கு எதிரானது என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டடு வருகின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.