
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்குக் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதியர் குடியேறி உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியின் 4 வயது பெண் குழந்தை காளியம்மன் கோவில் பகுதியில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று அந்த சிறுமியை, அவரது தாய் கண் முன்னே தூக்கிச் சென்றது. இதுகுறித்து சிறுமியின் தாய் வனத்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் சிறுமியை வனத்துறையினர் தீவிரமாகத் தேடினர். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் அடித்து சிறுமியை தேடும் பணி நடைபெற்றது.

இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குழுமினர். இன்றும் (21/06/2025) இரண்டாவது நாளாக காலை 7:00 மணி முதல் வனத்துறையினர் தேடுதல் பணி நடைபெற்றது. மோப்ப நாய் மற்றும் ட்ரோன் மூலம் தேயிலை தோட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று தேடினர். இடையே இடையே அந்த பகுதியில் மழை பொழிந்ததால் தேடுதலில் சிறிது தொய்வும் ஏற்பட்டது.
இந்நிலையில் குழந்தையின் உடலானது நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு வனத்துறையினரால் தற்போது மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.