/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_349.jpg)
தமிழக சட்டப்பேரவையின் செயலாளராக இருக்கும் சீனிவாசன்,நவம்பர் 30 ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில், அவரை முதன்மை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளித்ததுடன் 3 ஆண்டுகாலபணி நீட்டிப்பும் வழங்கியுள்ளது தமிழக அரசு. இந்த விவகாரம், கோட்டையில் உள்ள அதிகாரிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.
இது குறித்து, சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பும் பதவி உயவும் கொடுத்திருப்பது விதிமீறல். பதவி உயர்வுக்காக தகுதியுள்ள பல அதிகாரிகள் காத்திருக்க, ஓய்வு பெறும் நபருக்கு பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது கண்டனத்திற்கு உரியது என்று கொந்தளிக்கிறார்கள் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர்.
இதே சீனிவாசனுக்கு, கடந்த 2018-ல் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில், சிறப்பு செயலர் நிலையிலிருந்து செயலாளர் பதவிக்கு உயர்வு அளித்தது. அன்றைய அதிமுக சபாநாயகர் தன்பாலுக்கு மிகவும் நெருக்கம் என்பதால் இவருக்கு செயலாளராக பதவி உயர்வு அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விவகாரத்தை 2018-ல் கையிலெடுத்த அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், 'சீனிவாசன் பதவி உயர்வில் விதிகள் கடைப்பிடிக்கவில்லை; விதி மீறல்கள் நடந்துள்ளன என்று கடுமையாக கண்டித்திருந்தார். இது அன்றைக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படிப்பட்ட அந்த சீனிவாசனுக்கு, தற்போதைய திமுக ஆட்சியில், முதன்மை செயலாளராக பதவி உயர்வும், மூன்று ஆண்டுகால பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினால் கண்டிக்கப்பட்ட சீனிவாசன் என்ற அதிகாரிக்கு திமுக ஆட்சியில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன? என்று தான் தற்போது அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிலையில், சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், இதனால் பாதிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த பேரவை செயலக அதிகாரிகள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆலோசித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)