Skip to main content

விரிவான விவாதம் நடத்த பேரவைக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ்

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
tamil nadu assembly


மேகேதாட்டு அணை விவகாரம், கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், சென்னை & சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை  மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. இது சரியான நடவடிக்கை என்றாலும் கூட, மாலையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்க போதிய நேரம் கிடைக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.
 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணைய அனுமதி பெற்றுத்தந்ததன் மூலம் தமிழகத்திற்கு மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது. மேகதாட்டு அணை குறித்த ஆய்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், மன்னர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதைப் போல, பினாமி ஆட்சியாளர்களைப் போலவே அதிகாரிகளும் அலட்சியமாக இருந்ததன் விளைவாகத் தான் புதிய அணைக்கான ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது. இது தொடக்கக்கட்ட பணிகளுக்கான அனுமதி தான்; அணை கட்டுவதற்கான அனுமதி அல்ல என்று பல தரப்பிலிருந்தும் விளக்கமளிக்கப்படும் போதிலும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் கனவை கர்நாடகம் நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
 

மேகேதாட்டு அணை குறித்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்யவும், அனுமதியை திரும்பப்பெறும்படி வலியுறுத்தவும் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் உதவும். ஆனால், காவிரி சிக்கல் மட்டுமின்றி, கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த ஏராளமான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ள நிலையில், சில மணி நேரங்கள் மட்டும் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. மாலை 4.00 மணிக்கு தொடங்கும் பேரவைக் கூட்டத்தை அதிகபட்சமாக இரவு 8.00 மணி வரை நடத்த முடியும். தமிழகத்தின் தலையாய பிரச்சினைகள் குறித்து 4.00 மணி நேரத்தில் எத்தகைய விவாதங்களை நடத்த முடியும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
 

கஜா புயல் தாக்குதலால் காவிரி பாசன மாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பிரதமர் இன்னும் வரவில்லை. தமிழக அரசின் சார்பில் மிகவும் குறைவாக ரூ.15,000 கோடி மட்டுமே இழப்பீடு கோரப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி உதவி வழங்கவில்லை. ரூ.353 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த அநீதி குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதிக்காமல் இருக்க முடியுமா?

 

Ramadoss


1996&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் உயிரிழப்பதற்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட போதே, அது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை மிகவும் பலவீனமானது; அதற்கு மாறாக தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், உலக நீதிமன்றத்திற்கே சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என ஆட்சியாளர்கள் எகத்தாளம் பேசினார்கள். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எந்த நேரமும் ஆணையிடலாம் என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது.
 

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை தடுக்க  இப்போதும் வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து அறிவிப்பதாகும். இரண்டாவது, தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து  தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது ஆகும். நாளை மாலை நடைபெறவுள்ள பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.
 

எனவே, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை  மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். அதில் மேகேதாட்டு அணை விவகாரம், கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், சென்னை & சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன் நிறைவாக உரிய தீர்மானங்கள் - சட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.