Skip to main content

சட்டப் பேரவைக்குள் குட்கா விவகாரம்: உரிமைக்குழு இரண்டாவதாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பு!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

Legislative Assembly dmk issue Cancellation of the notice sent by the rights committee and the verdict

 

சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டு சென்றதாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கடந்த 2017ஆம் ஆண்டு, தமிழக சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கொண்டு வந்ததாக, பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்தது. எனினும், தவறுகளைக் களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் எனத் தெரிவித்திருந்தது.

 

இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை  எதிர்த்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்களும், திமுகவிலிருந்து  நீக்கப்பட்ட கு.க செல்வமும் வழக்கு தொடர்ந்தனர். 

 

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

 

இந்நிலையில், இடைக்காலத் தடையை நீக்கக் கோரி, சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை, நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

 

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா சத்தியநாரயணா, உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.

 

சார்ந்த செய்திகள்