Skip to main content

நாய்கள் மீது கல்லெறிந்தவருக்கு அடி-வளர்த்தவர் மீது வழக்கு!

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

dog

 

மனிதர்கள் மீதான வளர்ப்பு நாய்களின் பாசமும், வளர்ப்பு நாய்களின் மீதான மனிதர்களின் பாசமும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. காரணம், நாயை வளர்க்கும் ஒவ்வொரு மனிதனும், தான் செலுத்தும் பாசத்தைக் காட்டிலும் பல மடங்கு நன்றியுணர்வையும், பாசத்தையும் அதனிடமிருந்து பெற்றுத் திளைப்பதுதான். தன்னை முற்றிலும் உணர்ந்த ஒரே ஜீவன், தான் செல்லமாக வளர்க்கும் நாய் மட்டுமே என, குடும்பத்தினரைவிட ஒருபடி மேலாக மனதில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறான். அந்த நாய்க்கு ஏதாவது நடந்தால், துடித்துப் போகிறான்.

 

மேலே குறிப்பிட்டுள்ளது, வளர்ப்பு நாய்கள் அனைத்துக்கும் பொருந்தும் அளவுக்கு, வளர்ப்பவர்களுக்குப் பொருந்தாது. மனிதனுக்கு மனிதன் வளர்ப்பு நாய் மீதான அன்பின் விகிதாச்சாரம் மாறுபடும். சரி, நடப்பு நிகழ்வான வளர்ப்பு நாய்கள் குறித்த விஷயத்துக்கு வருவோம். ஸ்ரீவில்லிபுத்தூர்–தோப்பூரில் வசிக்கும் சிவன்பெருமாள், தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார். குருபுத்திரன் என்பவர், ஷிப்ட் முடித்துவிட்டு நள்ளிரவு கடந்து அதே ஏரியாவிலுள்ள தனது வீட்டுக்கு டூவீலரில் சென்றார். சிவன்பெருமாள் வீட்டை குருபுத்திரன் கடந்து சென்றபோது, வளர்ப்பு நாய்கள் விடாமல் குரைத்தபடி, கடிக்கவருவதுபோல் அவரை நோக்கி விரைந்துள்ளன. உடனே டூவீலரை ஸ்டான்ட் போட்டு நிறுத்திய குருபுத்திரன்,  அங்கு கிடந்த கல்லை எடுத்து நாய்களின் மீது எறிந்தார். இதனைக் கண்ட சிவன்பெருமாள் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கம்பைக் கையிலெடுத்து குருபுத்திரனின் தலையில் அடித்தார்.  

 

நெற்றியில் ரத்தக்காயத்துடன் வன்னியம்பட்டி காவல்நிலையம் சென்ற குருபுத்திரன்,  நாய்களை வளர்க்கும் சிவன்பெருமாள் தன்னைக் கம்பால் அடித்ததாகப் புகார் கொடுத்துள்ளார்.  சிவன்பெருமாள் மீது சட்டப் பிரிவுகள் 294(b) (பொது இடத்தில் ஆபாசமாகத் திட்டியது), 324 (மிருகத்தை அபாயம் விளைவிக்கப் பயன்படுத்தியது) மற்றும் 506(ii) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியிருக்கிறது.

 

வளர்ப்பு நாய் மீது என்னதான் பாசமிருந்தாலும், சகமனிதனும் தன்னைப்போல் ஒரு உயிரினமே என்பதை மறக்கலாமா? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.