சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண் குளறுபடி குறித்து தொடரப்பட்ட வழக்கிற்கு, தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்படிப்பில் சேர்வதற்காக, தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 5-ம் தேதி வெளியானது. இத்தேர்வில், மதிப்பெண்களில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, ஓசூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில், என் மகள் சத்தியஸ்ரீ 67.5 மதிப்பெண்கள் பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்படாததால், இணையதளத்தில் மதிப்பெண் சான்றை பதிவிறக்கம் செய்தபோது 22.75 மதிப்பெண் பெற்றிருப்பதாக பதிவாகியிருந்தது. என் மகளின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு சட்டக் கல்வி பயிலும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதால், தேர்வு முடிவின்போது அவர் பெற்ற 67.5 மதிப்பெண்களையே வழங்கவேண்டும். தென்மாநிலங்களில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில், அவருக்கு ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், மனுவுக்கு நவம்பர் 5-ம் தேதிக்குள் பதில் அளிக்க தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புக்கு உத்தரவிட்டார்.