தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன், தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரன், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெரா, அவரது ஈரோடு வீட்டில் இருந்த போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று (04.01.2023) மதியம் மரணமடைந்தார்.
மறைந்த திருமகன் ஈவெரா-வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10 மணிக்கு ஈரோட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் சு.முத்துசாமி, காந்தி, கே.என்.நேரு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அவர்களைத் தொடர்ந்து இன்று (05.01.2023) காலை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு மறைந்த திருமகன் உடல் ஈரோடு மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.