Skip to main content

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.