Lata Rajinikanth to face contempt of court action! - Warning in Ashram school related case!

Advertisment

ஆஸ்ரம் பள்ளி வளாகத்தைக் காலிசெய்ய, ஏப்ரல் 30 வரை அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள கல்விச் சங்கத்தை எச்சரித்துள்ளது.

ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளரான லதா ரஜினிகாந்த், சென்னை, கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான அந்த இடத்திற்கு வாடகை தொடர்பாக பிரச்சனை இருந்துவந்தது.

இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி, 1 கோடியே 99 லட்சத்தைச் செலுத்த உத்தரவிடக்கோரி, இட உரிமையாளர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி, திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Advertisment

அதன் பின்னரும் வாடகை பிரச்சனை நீடித்த நிலையில், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி, இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தைக் காலி செய்வது என, ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக, தாங்கள் உறுதியளித்தபடி காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்கக் கோரி, சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என். சதீஷ்குமார் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு, டிசம்பர் 14-ல் விசாரணைக்கு வந்தபோது, ‘இடத்தைக் காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாகச் செலுத்தி வருகிறோம். எனவே, கால அவகாசத்தை இந்தக் கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டும்.’ என லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

இதன்பின்னர், நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டிடத்தைக் காலிசெய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்திற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்விச் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என, அதன் செயலாளர் லதா ரஜினிகாந்தை எச்சரித்துள்ளார். மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும், ஸ்ரீராகவேந்திரா கல்விச் சங்கத்திற்குத் தடைவிதித்துள்ளார்.