
கடந்த 25.05.2025 அன்று நள்ளிரவு துபாயிலிருந்து 326 பயணிகளுடன் ‘துபாய் எமிரேட்ஸ்’ என்ற விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராக இருந்த போது விமானத்தின் மீது லேசர் ஒளி அடித்து விமானத்துக்கு வரக்கூடிய சிக்னலை திசை திருப்பும் செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர். இதனால் விமானம் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இது குறித்து விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் ஓடு தளத்தில் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. விமானம் மீது லேசர் ஒளி லைட் அடிக்கப்பட்ட சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுபோன்று லேசர் ஒளி அடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பூனேவிலிருந்து 178 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது அதேபோல மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் தரையிறங்க வந்த விமானம் சிறிது நேரம் வானத்திலேயே வட்டமடித்து 15 நிமிடத்திற்கு பின்னாக பத்திரமாக தரையிறங்கியது. மீண்டும் விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.