Skip to main content

ராசா கோவிலில் முதல் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

large number of devotees participated Chariot at Rasa Temple

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தென்முகம் வெள்ளோடு கிராமத்தில் சாத்தந்தை பிரிவு மக்களின் குலதெய்வமான ராசா சுவாமி - நல்லமங்கையம்மன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் கடந்த 1987-ம் ஆண்டு முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தற்போது 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. சாத்தந்தையினர் அருகே உள்ள கிராமங்களான உலகபுரம் கரை, கனகபுரம் கரை, தேவபுரம் கரை ஆகியவற்றை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான குடும்பத்தினரின் குல தெய்வமாக இக்கோவில் திகழ்கிறது.

 

இந்தநிலையில் தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்றம் சார்பில் ராசா சுவாமி - நல்லமங்கையம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலையில் மூலவர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலச பூஜை நடந்தது. இதையடுத்து புதிய தேரின் கோபுரத்தில் கலசம் நிறுவப்பட்டது.

 

உற்சவ சாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நல்லமங்கையம்மன் உடனமர் ராசா சுவாமி புதிய தேரில் அமர வைக்கப்பட்டனர். அதன்பிறகு தேரோட்டம் தொடங்கியது. தேர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி நிலை வந்தடைந்தது. விழாவில் கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி, கேரளா கவுமா பால்பண்ணை உரிமையாளர் மருதாச்சலம், திருப்பூரை சேர்ந்த சாமியப்பன், தங்கவேல், முன்னாள் எம் எல் ஏ.க்கள் குணசேகரன், கிட்டுசாமி மற்றும் தென்முகம் வெள்ளோடு மூன்று கரை சாத்தந்தை குல மக்கள் நல சங்க நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் உள்பட ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் தலைவர் சி.முத்துசாமி, செயலாளர் என்.டி.கண்ணுசாமி, பொருளாளர் கே.டி.பொன்னுசாமி, துணைத் தலைவர் எல்.நடராஜன், துணைச் செயலாளர்கள் கே.திருமூர்த்தி, எஸ்.தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று மாலை 7 மணிக்கு தேர் இக்கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் என்றும், மற்ற நாட்களில் பக்தர்கள் விரும்பினால் உரிய கட்டணம் செலுத்தி மாலை 7 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கலாம் எனவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.