Skip to main content

ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைப்பு; மீண்டும் தொடங்கிய போக்குவரத்து!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Landslide repair on Yercaud Hill Trail; Traffic resumed!

 

கனமழையால் ஏற்காடு மலைப்பாதையில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. நான்கு மணி நேரத்தில் மண் சரிவு பிரச்சனை சரி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும் இரு நாள்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில், சனிக்கிழமை இரவு பெய்த மழையால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 40 அடி பாலத்திற்கும் 60 அடி பாலத்திற்கும் இடையே திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. 


இதனால் சாலையில் பாறாங்கற்கள் உருண்டோடி வந்து விழுந்தன. சரிந்த மண்ணும் பாதையிலேயே குவிந்து கிடந்தது. இதையடுத்து அந்த பாதையில் போக்குவரத்து முடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஜே.சி.பி உள்ளிட்ட இயந்திரங்கள் உதவியுடன் 4 மணி நேரத்தில் மண் சரிவு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சேலம் - ஏற்காடு சாலையில் போக்குவரத்து சீரடைந்தது. 

 

Landslide repair on Yercaud Hill Trail; Traffic resumed!

 

மண்சரிவு குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். ஏற்காடு செல்லும் சாலையில் எதிர்காலத்திலும் மண் சரிவு பிரச்சனைகள் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஏற்காடுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். சுற்றுலா பயணிகளுக்காக செய்துள்ள அடிப்படை வசதிகளையும் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 


சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், ''ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு, இரவோடு இரவாக சரி செய்யப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மண்சரிவு பிரச்சனை சரி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவில் கனமழை இருந்தால், பாதையை மூட வேண்டியிருக்கும். சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை விழா நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.