Skip to main content

விரைவில் நில மீட்பு போராட்டம்...!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

LAND STRUGGLE IN ERODE

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனர். இன்று காலை அருந்ததியர் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராமன் தலைமையில் அதன் நிர்வாகிகள் வந்து பெட்டியில் மனு போட்டனர். பிறகு வடிவேல் ராமன் கூறும்போது,

"ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியையடுத்த நஞ்சை ஊத்துக்குழி பகுதியில் சுமார் 100 ஏக்கர் தரிசு நிலத்தை, நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் நில சீர்திருத்த துறை மூலம் அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் சுமார் 100 நபர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நில ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அந்த நிலங்கள் தரிசு நிலமாக உள்ளதால் பாசன வசதி இல்லை. இதனால் இங்கு எவ்வித விவசாயப் பணியும் மேற்கொள்ளாமல் நிலம் பெற்றவர்கள் இருந்தனர்.

இந்தநிலையில் வசதி படைத்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலர் குறைந்த விலைக்கு அம்மக்களிடமிருந்து அந்த நிலத்தை எழுதி வாங்கி விட்டார்கள். தற்போது அந்த இடத்தில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. வருவாய்த் துறை ஆவணங்களில் நில ஒதுக்கீடு பெற்ற பட்டியலின மக்களின் பெயர் உள்ளது. எனவே, இதுகுறித்து அரசு உரிய விசாரணையை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு அரசுப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு போதுமான நிலத்தை ஒதுக்கித் தரவேண்டும். அரசு இதைச் செய்யவில்லையென்றால் விரைவில் நில மீட்பு போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.