Skip to main content

பொங்கல் பண்டிகையன்று பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை...

Published on 16/01/2020 | Edited on 16/01/2020

நெல்லை மேலப்பாளையம், வேடுவர் காலனிப் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி சூரியசந்திரமதி. இவர்கள் இந்த பகுதியில் சொந்தமாக வீடுகட்டி கடந்த 16 வருடங்களாக வசித்து வருகின்றனர். தங்கமுத்து மதுரையில் டீ கடை நடத்தி வருகிறார்.

 

land issue causes ruckus in thirunelveli

 

 

குடும்ப நிகழ்ச்சி, விழாக்காலங்களில் மேலப்பாளையத்தி்ற்கு வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது பொங்கல் திருவிழாவிற்காக இவர் மேலப்பாளையம் வந்துள்ளார். ஏற்கனவே இவரது வீட்டிற்கும் அருகில் உள்ள ஜெயராஜா என்பவர் வீட்டிற்கும் இடையே ஒரு குறுக்குச்சுவர் உள்ளது. இந்த இடப்பிரச்சனை தொடர்பாக இருவருக்கு முன்விரோதம் இருந்து வந்த நிலையில், அடிக்கடி தகராறும் நடக்கும் என கூறப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகை அன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருவரையும் பேசி சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர் .  இந்த இடப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த சூழலில் கடந்த வாரம் தங்கமுத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தங்கமுத்துக்கு இரண்டு மகன்கள் , மூன்று மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகள் சுமதி என்பவர் கணவர் ஆறுமுகத்துடன் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் குடியிருந்து வருகிறார். சுமதி மேலப்பாளையம் உழவர்சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளார். இன்று பொங்கல் பண்டிகையொட்டி தனது தந்தை வீட்டிற்கு தனது மகன் ஜெகதீசுடன் சுமதி வந்துள்ளார் . அப்போது தந்தையும், மகளும் இடப்பிரச்சனையுள்ள அந்த சுவருக்கு வெள்ளையடிக்க முயற்சித்ததாக தெரிகிறது. ஏற்கனவே தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராத நிலையில் ஆத்திரத்தில் இருந்த ஜெயராஜா, தனது இரண்டு மகன்களுடன் தங்கமுத்துவிடம் தகராறு செய்துள்ளார் . தகராறு முற்றவே மூன்று பேரும் சேர்ந்து தங்கமுத்து அவரது மகள் சுமதி ஆகியோரை வாளி மற்றும் கம்பியால் அடித்து தாக்கியுள்ளனர் .

இதில் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகராறின் போது மகன் கண்முன்னேயே தாய் சுமதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி இரண்டு பேர் உடலையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கான அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஜெயராஜா மற்றும் அவரது மகன்கள் ஆகிய 3 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.