
கரூர் மாவட்டம், மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர், இன்று திருச்சி டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில், ‘கரூர் மாவட்டம் கடவூரில் எனக்கு ரூ.2 கோடி மதிப்பில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை ரூ.3.50 லட்சம் ரூபாய்க்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிலர் பதிவு செய்து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து திருச்சி டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஏற்கனவே கடந்த 31 ஆம் தேதி புகார் அளித்ததன் பேரில் கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன், மார்க்கண்ட வேல், மயிலம் பட்டியைச் சேர்ந்த நிஜாமுதீன், தரகம்பட்டி சேர்ந்த நாகராஜ், பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் என்னை கடத்தி கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்.
ஆகவே இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து எனது நிலம் எனக்கு மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.