Skip to main content

ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகள்; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Lambs for helpless women! DMK's government!

 

தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவலையோடு கவனித்து வருகிறது திமுக அரசு. அவர்களுக்கு நிதி உதவி வழங்குவதைக் காட்டிலும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்ற முடிவினை சமீபத்தில் எடுத்திருக்கிறது திமுக அரசு.

 

இந்த நிலையில், தமிழக கால்நடைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து, ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர்களுக்கு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளை இலவசமாக வழங்க வலியுறுத்தியுள்ளது ஆட்சித் தலைமை. அதன்படி, செம்மறி ஆடுகள் (அ) வெள்ளாடுகள் பெறும் பயனாளிகள் என 38,800 பெண்களை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இலவசமாக 5 செம்மறி ஆடுகள் (அ) வெள்ளாடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக, 75 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளது  தமிழ்நாடு கால்நடை, பால் வளம், மீன் வளத் துறை அமைச்சகம்.

 

மீன்கள் தருவதை விட மீன்களைப் பிடிக்க கற்றுத் தாருங்கள் என பிரபல சொல்லாடல் உண்டு. அதேபோல, ஆதரவற்ற பெண்களுக்கு நிதி உதவி தருவதையும் விட, அவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றுவதே சிறந்த பணியாக இருக்கும் என்பதை இந்த அரசாணை உணர்த்துகிறது.

 

கடந்த ஆட்சியில் இதே திட்டம் அமலில் இருந்தது. அதில் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்ததால் அந்த திட்டம் குறித்த வில்லங்கங்கள் அம்பலமானது. அதே போல, திமுக அரசிலும் ஊழல்கள் நடக்காமல் இருந்தால் மட்டுமே இது நிஜமாகவே ஆதரவற்ற பெண்களுக்கு பலனளிக்கும் என்கிறார்கள் ஊழல்களுக்கு எதிரான அமைப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.