Lalgudi soldier passes away on China border

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மற்றும் ராஜம்மாள் தம்பதியின் மகன் தேவ் ஆனந்த் (25). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பல இடங்களில் பணியாற்றிவிட்டு தற்போது சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், பணியை முடித்துவிட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு ராணுவ வாகனத்தில் பயணம் செய்துள்ளார். மலையிலிருந்து கீழே இராணுவ ட்ரக் இறங்கிக்கொண்டிருந்தபோது நிலை தடுமாறி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Advertisment

இந்த வாகனத்தில் பயணம் செய்த ஆறு ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவ் ஆனந்த் என்பவர் பலியானதாகவும் இதுவரை நான்கு பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் இரண்டு பேரின் உடல் தேடும் பணி நடைபெற்றுவருவதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். இன்று (02.07.2021) இரவு அல்லது நாளை தேவ் ஆனந்த் உடல் லால்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவ் ஆனந்தின் உயிரிழப்பு அவருடைய குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெற்றோர்கள், அண்ணன், அக்கா ரீட்டா மேரி உள்ளிட்ட உறவினர்கள் தேவ் ஆனந்தின் உடல் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.