Skip to main content

“மழைக் காலத்திற்குள் ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும்” - விவசாயிகள் கோரிக்கை! 

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

"Lakes, ponds and canals should be dredged during the rainy season" - Farmers demand!

 

கரோனோ நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்  காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்திலிருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் காணொளி காட்சி மூலம்  தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர்  மாதவன் பேசும்போது, “கோமுகி அணையிலிருந்து மணிமுத்தாறு ஆற்றில் வரும் தண்ணீரை சேலம் மாவட்டத்திற்கு எடுத்துச்செல்லும் திட்டத்தால் விருத்தாசலம்,  கம்மாபுரம்,  புவனகிரி ஒன்றியங்களில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வருவது தடைபட்டு விவசாயம் பாதிப்படையும், விவசாயிகள் பாதிப்பு அடைவர். அதனால் இந்தத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மக்காசோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கான மூன்று ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.  கரும்பு பயிருக்கான ஊக்கத்தொகையை தீபாவளிக்குள் வழங்கவேண்டும்” என்றார்.  


அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, “பகுதி வாரியாக ஆய்வு நடத்தி காப்பீட்டு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார். சிதம்பரம்  ரவீந்திரன் பேசும்போது, “வடகிழக்கு பருவமழை குறைவாக இருக்கும் என்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பாசன நீர் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும். தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படும் பூச்சு மருந்து,  களைக்கொல்லி மருந்துகளின் தரம், தன்மை, விலை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்” என்றார். அதற்கு மாவட்ட ஆட்சியர், “தனியார் பூச்சி மருந்து கடைகளில் மருந்தின் தரம், தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். அந்த குழுவினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.
 
கார்மாங்குடி வெங்கடேசன் பேசும்போது, “ஒருங்கிணைந்த பண்ணையம் அனைவரும் பயன்படும் வகையில் முறையாக செயல்படுத்த வேண்டும். சர்க்கரை ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வாய்க்கால்கள், குளங்களை முழுமையாகத் தூர்வார வேண்டும்” என்றார். அதற்கு, “வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் ஆட்சியர். 


மூர்த்தி எனும் விவசாயி பேசுகையில், “வீராணம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் வரவில்லை” எனக்கூற அதற்கு மாவட்ட ஆட்சியர், “கடைமடை பகுதிவரை தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
 

இதேபோல் நல்லூர்,  மங்களூர், வேப்பூர் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிகளில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், வனத்துறை மூலம் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.  மேலும் பெரும்பாலான விவசாயிகள் ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தினர். 
 

இந்த குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா,  வேளாண்மை இணை இயக்குனர் முருகன்,  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காமராஜ், மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார்,   மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரர் சாகாமூரி, "இந்த ஆண்டு அதிக மகசூல் காரணமாக 97 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 54,807 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தேவையான விதை,  உரம் போன்றவை எளிதாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 1,11,904 விவசாயிகள்,  97,517 ஏக்கரில் பதிவு செய்து ரூபாய் 62 கோடி காப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர். தற்போது மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.297 செலுத்தி காப்பீடு செய்யலாம். இதற்கு பதிவு செய்ய நாளை கடைசி நாள்" என்றார். மேலும் பருத்திக்கு ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூபாய் 1,074. இத்திட்டத்தில் சேர 15.11.2020 அன்று பதிவு செய்ய வேண்டும். நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூபாய் 469 செலுத்தி அடுத்த மாதம் நவம்பர் 31ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் சம்பா சாகுபடிக்கு 880 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இதுதவிர வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் 140 மெட்ரிக் டன்னும், விதை சுத்திகரிப்பு நிலையம் மூலம் 340 மெட்ரிக் டன்னும் கையிருப்பு உள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.