Skip to main content

மருத்துவமனை கட்ட இடத்தை தானமாகக் கொடுத்த கூலித் தொழிலாளியின் குடும்பம்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

 labourer's family donated land to build a hospital

 

அரசுக்குச் சொந்தமான இடத்தினை பலரும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிற போது திருப்பித் தராமல் பொய் தகவல்களைச் சொல்லி அதைச் சொந்தமாக்கிக்கொள்ள முயன்று வருகிறார்களென ஆயிரக்கணக்கான புகார்கள் தமிழ்நாடு முழுவதுமே உள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கான அரசு மருத்துவமனை அமைக்க இடமில்லாமல் நிர்வாகம் தடுமாறியபோது தங்களுக்குச் சொந்தமான இடத்தை வழங்கியுள்ளார்கள் கூலித் தொழிலாளர்கள்.

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. பேரூராட்சியும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் அனுப்பியது. துணை சுகாதார நிலையம் அமைக்க 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியது. நிதி வந்துவிட்டது, ஆனால் இடம் எங்கே என பேரூராட்சி, சுகாதாரத்துறை தேடத் துவங்கியது. அரசு நிலம் எங்குள்ளது என ஆய்வு செய்தபோது அதற்கான நிலம் எங்கும் இல்லாமல் இருந்தது. இதனால் கட்டடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.

 

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் ராஜ்குமார் அவரது மனைவி அன்னபூரணி குடும்பத்தார் தங்களுக்குச் சொந்தமான 1305 சதுர அடியுள்ள இடத்தினை திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்கத்துக்கு தானமாக வழங்குவதாகக் கூறினர். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அதிகாரிகள் கடந்த நவம்பர் 22ஆம் தேதி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதியிடம் இடத்தினை ரிஜிஸ்டர் செய்து தானமாக வழங்கினர்.

 

அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலரும் வாழ்ந்து வரும் நிலையில் தங்களது இடத்தை மருத்துவமனை கட்ட தானமாக வழங்கியதைக் கேள்விப்பட்டு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.