
விவசாய நிலத்தில் கூலித் தொழிலாளி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆலாம்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ்(30). இன்னும் இவருக்குத் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிலிருந்து சென்ற செல்வராஜ் இரவு ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் இன்று குடியாத்தம் - ஒலக்காசி சாலையில் அண்ணாமலை என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து குடியாத்தம் கிராமிய காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வராஜ் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும், கொலையாளி குறித்து குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.