Laboratory and new road inaugurated by NLC Chairman at Annamalai University 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பொறியியல் வளாகத்தில் மாணவர்களுக்கு சுரங்கவியல் பட்டய படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 60 இடங்களில் 30 இடங்கள் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கும், மீதி 30 இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் வழங்கப்படுகிறது. இதுவரை சுரங்க பட்டய படிப்பு பயின்ற 220 மாணவர்கள் என்.எல்.சி.யில் 2 வருட தொழிற்பயிற்சியை முடித்துள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் சர்வேயர், ஓவர்மேன், சர்த்தார் போன்ற பதவிகளில் நிரந்தர அடிப்படையில் என்.எல்.சி.யில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் சுரங்கவியல் கட்டிடத்தில் ரூ 50 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இயக்கவியல் ஆய்வகம், ரூ 20 லட்சம் செலவில் சூரிய சக்தி விளக்குகளுடன் சுரங்கவியல் கட்டிடத்துக்கான இணைப்பு சாலை ஆகியவற்றை அமைத்துள்ளது. இதனை மாணவர்களின் பயன்பாட்டிற்குத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 தொழில்துறை பயிற்சியாளர்களுக்கான ஆணை வழங்கும் விழா சுரங்கவியல் வளாகத்தில் நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்ச்சியில் சுரங்கவியல் பட்டயப் படிப்பின் இயக்குநர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக என்.எல்.சி. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி கலந்து கொண்டு ஆய்வகம் மற்றும் இணைப்பு சாலையைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் அண்ணாமலைப் பல்கலையில் சுரங்க பொறியியல் இளங்கலை (B.E. Mining Engineering) பட்டப் படிப்பைத் தொடங்குவது போன்ற எதிர்கால வளர்ச்சி திட்டங்களுக்கு தம்மால் இயன்றதைச் செய்வதாக உறுதியளித்து இது விரைவில் நடைபெறும் என்றார்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறை பயிற்சியாளர்களுக்கு ஆணைகளை ஜாஸ்பர் ரோஸ், சுரங்க பட்டய படிப்பு இயக்குநர் சரவணன் ஆகியோர் வழங்கினார்கள். இதில் என்எல்சி மனிதவள மேம்பாட்டிற்கான இயக்குநர் சமீர்ஸ்வரப், பெருநிறுவன சமூகப் பொறுப்புகளுக்கான செயல் இயக்குநர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு என்.எல்.சி. நிர்வாகமும் அண்ணாமலை பல்கலைக்கழகமும் இணைந்து எவ்வாறு சுரங்கவியல் பட்டய பயிற்சியை வழங்கி வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு என்ன பயன் என்பது குறித்து விளக்கிப் பேசினார்கள்.

Laboratory and new road inaugurated by NLC Chairman at Annamalai University 

Advertisment

என்.எல்.சி.யின் தலைமை பொது மேலாளர் ஸ்ரீனிவாசபாபு உள்ளிட்ட என்எல்சி அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்வினை பல்கலைக்கழக பொறியில் புல முனைவர் சிவராஜ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் பழனிவேல் ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.