Skip to main content

பொதுமக்கள் அவதி... போக்குவரத்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Labor Welfare Commission calls transport workers for talks!

 

14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் 385 அரசு பேருந்துகளில் 40 பேருந்துகளே இயக்கப்படுகிறது. தற்காலிகப் பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்கலாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தாலும் நேற்று ஆலங்குடி பகுதியில் ஏற்பட்ட அரசு பேருந்து விபத்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதுக்கோட்டையில் வெறும் 15 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்துக்காக தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடியுள்ளார். 

 

அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதை சாதகமாக எடுத்துக்கொண்டு தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்ல ரூபாய் 37 ஆக இருந்தது கட்டணம். தற்போது 150 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக  பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சென்னையிலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எப்பொழுதுமே காலை 5 மணியில் இருந்தே பேருந்து சேவை தொடங்கும் நிலையில், தற்பொழுது குறைந்த பேருந்துகளே இயக்கப்படுகிறது.

 

இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைத்துள்ளது.  இன்று மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணைய துணை ஆணையர் தலைமையில் தேனாம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணையத்துடன் நடத்தப்படும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னரே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நிலை என்னவென்று தெரியவரும்.

 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.