Skip to main content

‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’.... என்று கூறியபடியே நகர்ந்து சென்ற எல்.முருகன்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

L. Murugan kept moving saying 'Jai Sri Ram', 'Jai Sri Ram' in Erode

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் நேற்று முன் தினம்(14ம் தேதி) குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

 

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இது வரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றை தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். என தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று ஈரோடு மாவட்டம் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வருகிற 2029 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் நடைமுறைக்கு வரும். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் 3 மாத காலம் தான் இருக்கிறது என்பதால், இது 2029 ஆம் ஆண்டின் போது நடைமுறைப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் கூறினார்கள். மேலும், இந்த சட்டத்தை வழிமுறைப்படுத்துவதற்கு நிறைய காலம் தேவைப்படுகிறது. அதனால், அதற்கு விசாரணை குழு ஒன்றை அமைத்து நாடு முழுவதும் ஆய்வு செய்த பிறகு தான் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும்.

 

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இருப்பார்கள். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்து அந்த நேரத்தில் சொல்வார்கள். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை என்பது தனி சுதந்திரமிக்க அமைப்புகள். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்துக்கொண்டு அவர்கள் அந்த சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆ.ராசா போன்றோர்கள் மக்கள் வரிப் பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார்கள். அதனால், அமலாக்கத்துறை சோதனையின் மூலம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். 

 

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அகமதாபாத் மைதானத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்பியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ இதற்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க வேண்டுமென்றால் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’... என்று கூறியபடியே நகர்ந்து சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.