Kuwait tamil person passed away ministers paid homage

Advertisment

குவைத் நாட்டில் பணிபுரிந்த இடத்தில் இறந்த திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சார்ந்த முத்துக்குமரனின் உடல், தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு விமானத்தின் வாயிலாக திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று (16.9.22) கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் முத்துக்குமரன் உடலை திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடிக்கு சிறப்பு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த முத்துக்குமரனின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், “வேலை நிமித்தமாக முத்துக்குமரன் சென்று அங்கு உயிரிழந்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது. அங்கு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்தத் துறை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.

Advertisment

கடந்த ஆண்டில் 152 பேரும், இந்த ஆண்டு 116 பேரும் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்டு அவர்களது உறவினர்களிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. அதே போல் வெளிநாட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும், இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை முன் வைத்திருந்தனர். அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம்” என்று கூறினார்.